பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 16.pdf/117

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

மண்ணும் மனிதர்களும்

105


ஒரு நாள், இரவு ஏழு மணி! அறை வாசலில் ஒரு கார் வந்து நின்றது. அந்தக் காரிலிருந்து திருக்கடவூர் கைலாசம் பிள்ளை-திருக்கடவூர் பிச்சைக்கட்டளை விசாரணைதாரர் வேறு ஒருவருடன் வந்தார். திருக்கடவூரில் நாம் கட்டளைத் தம்பிரானாக இருந்தபோது பிள்ளை அவர்களுடன் நல்ல பழக்கம். அறைக்குள் வந்தவர்களுக்குப் பாய் எடுத்துப் போட்டு உட்காரும்படி கேட்டுக் கொண்டோம். உட்கார்ந்த பிள்ளையவர்கள் வழக்கமான விசாரணைகளுக்குப் பிறகு. எதிர்பாராத விதமாக "பெட்டியில் துணிகளை எடுத்து வைத்துக்கொண்டு புறப்படுங்கள்... போகலாம்!” என்றார்.

நமக்கு ஒன்றும் புரியவில்லை. “எங்கே ?” என்று கேட்டோம்.

“புறப்படுங்கள்... அப்புறம் சொல்கிறேன்!” என்றார்.

"எங்கே போவது? மகாசந்நிதானம் அவர்களிடம் உத்தரவு பெறாமல் வெளியே எங்கும் செல்லக்கூடாதே?” என்று சொன்னோம்,

"இப்போது புறப்படுங்கள்! சொல்லிக்கொண்டு போகிற மாதிரி சூழ்நிலை இல்லை போய் காரியம் முடிந்த பிறகு வந்து சொல்லிக்கொள்ளலாம்” என்றார்.

நமக்கு ஒன்றும் புரியவில்லை. விவரங்கள் தெரிந்து கொள்ளாமல் புறப்பட இயலாமையைக் கண்டிப்புடன் கூறினோம்! அப்போது அவர், “குன்றக்குடி ஆதீனத்தில் தங்களுக்குப் பட்டம் கட்ட விரும்பி அழைக்கிறார்கள்! இங்கே தெரிந்தால் அனுப்பமாட்டார்கள்! ஒருவர் நல்லது அடைய இந்தக் காலத்தில் யாரும் ஒத்துழைக்க மாட்டார்கள்! ஆதலால் புறப்படுங்கள்.... போய்ப் பட்டத்தைக் கட்டிக்கொண்டு திரும்ப வந்து பார்க்கலாம்!” என்றார்.

நமக்கோ எரிச்சல், தாங்க முடியவில்லை, சோரம் போகும் பழக்கம். நமக்கு இல்லை.

கு.XVI.8.