பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 16.pdf/171

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

மண்ணும் மனிதர்களும்

159



மறுநாள் காலை வழக்கம்போல் பூஜைமடத்தில் வழிபாடு செய்துவிட்டு, மகாசந்நிதானத்திடம் திருநீறு பிரசாதம் கொடுக்கச் சென்றோம்! தந்தோம்! மகாசந்நிதானம் வாங்கிக்கொண்டார்கள். நமக்குத் திருநீறும் தந்தார். ஆனால், முகத்தோடு முகம் பார்க்க இயலவில்லை. சிரித்து நோக்கும் பார்வை கிடைக்கவில்லை. இப்படிச் சில நாட்கள் ஓடின. இடையில் சா. சொக்கலிங்கம் ஒரு தவறு செய்து விட்டார். அதாவது, இந்தப் பிணக்குச் செய்தியை தருமபுரம் ஆதீனத்துக்கு எழுதி விட்டார். அங்கிருந்து ஒரு அலுவலர் வந்தார். நம்மை விசாரித்தார். நாம் "ஒன்றும் இல்லை. எல்லாம் நன்றாக நடக்கிறது” என்று கூறி அனுப்பி விட்டோம்.

குன்றக்குடிக்கு வந்து தொழும்பா இருப்பதாக முடிவு செய்தபிறகு தருமபுர ஆதீனத்துக்குச் சொல்வதும் பரிகாரம் தேடுவதும் மரபன்று, கண்ணகி சொன்ன பீடன்று என்பது இல்வாழ்க்கைக்கு மட்டும் அல்ல. துறவறத்துக்கும் பொருந்தும் அல்லவா!

சில நாட்கள் ஓடின. வழக்கம்போல் நாம் மகாசந்நிதானத்துக்கு மாலை நேரத்தில் விசிறிக்கொண்டிருந் தோம். செவ்வி பார்த்து, செய்த பிழை யாதென அறிய மகாசந்நிதானத்திடம் விண்ணப்பித்துக் கொண்டோம். உடனே மகாசந்நிதானம் தக்கன் வேள்வித் தீயென, "நீங்கள் தான் அதிகாரத்தைப் பறிக்கச் சூழ்ச்சி செய்கிறீர்களே! நான் மரணமடைய மந்திரம் செய்கிறீர்களாமே?” என்றார், உடனே நாம் விசிறியைக் கீழே வைத்துவிட்டு மகாசந்நிதானத்தின் முன்வந்து நிலத்தின் மிசை வீழ்ந்து வணங்கி "இப்பிறப்பில் ஏதும் பிழை செய்யவில்லை. வலிந்து அழைத்தும் பட்டமேற்க மறுத்த எனக்கு அதிகார ஆசையா? ஒருபொழுதும் இருந்த தில்லை. இனிமேலும் வராது. மகாசந்நிதானம் உண்மை தெரியவேண்டும்!” என்று கூறி வேண்டிக்கொண்டு திரும்பத் திரும்ப வீழ்ந்து வணங்கினோம்.