பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 16.pdf/258

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

246

தவத்திரு குன்றக்குடி அடிகளார்


அரும்பும்-மனிதனும்

அரும்பு மலர்ந்து விட்டபிறகு எப்படி மணத்தைச் சிறைப்படுத்திவைக்க முடியாதோ அப்படித்தான் அன்பில்அறத்தில்-கொள்கை உறுதிப் பாட்டில் மலர்ந்து விட்டால் மனிதனையும் யாரும் சிறைப்படுத்தி வைக்க முடியாது.

பசுவும்-இலக்கியமும்

பசுவைக் குளிப்பாட்டிப் பொட்டிட்டு இலட்சுமி என்று பாராட்டுவார்கள்-தீனி மட்டும் சரியாக வைக்க மாட்டார்கள். அதுபோல, தமிழர்கள் இலக்கியங்களைப் படிப்பார்கள்-பாராட்டுவார்கள்; வாழ்க்கையில் கடைப்பிடிக்க மட்டும் மாட்டார்கள்.

மழை நீரும்-மனித உணர்ச்சியும்

மழை பெய்து தண்ணிர் புரண்டோடி வருகிறது; அதனைக் கால்வாய்களின் வழிக் கொணர்ந்து-ஏரிகளில் தேக்கிக் கழனிக்குப் பாய்ச்சும் போதுதான் உரிய பயன் ஏற்படுகிறது. அதுபோல, மனிதனிடம் இயல்பாகத் தோன்றும் உணர்ச்சிகளை அறிவுக் கால்வாய்களின் வழியே செலுத்தி, அனுபவம் என்ற ஏரியில் தேக்கிச் செயல்முறை என்ற கழனியில் செலுத்தினால் உரிய பயன் ஏற்படும். சிந்தனையற்ற மனிதனின் உணர்ச்சிகள் பொட்டல்காட்டில் பெய்த மழை போல பயனற்றுப் போய்விடும்.

சொறி சிரங்கு

மனிதன், சொறி சிரங்கு பிடித்தவன் போல அரிப்பு ஏற்படும் போது சொறிந்து கொள்வான்; சொறியும் போது சுகமாக இருக்கும். பின்னர் எரிச்சல் ஏற்படும். அவ்வாறு எரிவெடுத்ததும் இனி சொறியக் கூடாது என்று தனக்குள் எண்ணிக் கொள்வான். பின்னர் ஊரல் ஏற்படும் போது தன்னை மறந்து சொறிய ஆரம்பித்துவிடுவான். அது போல,