பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 16.pdf/260

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

248

தவத்திரு குன்றக்குடி அடிகளார்



ஆரோக்யமாக விளையாடச் செய்து, நம் திறமையால் பந்தை விளையாடித்தான் வெற்றி பெற வேண்டும். அந்த விளை யாட்டுப் போட்டியைப் போலவே நமது வாழ்க்கைப் போட்டிகளையும் திறந்த வெளியில் நடத்தி வெற்றி பெற வேண்டும்.

அடித்தளமும்-கூரையும்


அடித்தளத்திற்கும் கூரைக்கும் ஏற்றபடி வீட்டிற்கு வாயிற்படி அமையும். ஒரு மனிதனின் உழைப்பு, அறிவு ஆகியவற்றிற்கேற்பவே அவனுக்குச் செல்வம், செல்வாக்கு அமையும். மனிதனுக்குக் கால்-கைகள் உழைப்பின் சின்னம்அடித்தளம். தலை அறிவின் சின்னம்-கூரை.

சமயமும்-அறப்பணியும்

அறம், வேறு சமயம் வேறல்ல-கை, கால் எல்லாம் சேர்ந்ததுதானே உடம்பு. அவை இல்லாமல் உடம்பு உண்டா? மேலே கூறியன யாவும் உடலின் உறுப்புக்கள். அவற்றிற் சில குறைந்தாலும் மனிதன் வாழ்ந்து விடலாம். ஆனால், இதயம் இல்லாமல் வாழ முடியுமா? இதயம் வேறு நாம் வேறு அல்ல. நம் வாழ்வுக்கு இதயம் போலச் சமயத்திற்கு அறம் அவசியம். எனவே, அறம் வேறு சமயம் வேறு அல்ல. அறமே சமயம், சமயமே. அறம்.

கொடியும்-ஆர்வலனும்

படரும் கொடிக்குக் கொம்பு நட்டால் நன்றாகப் படர்ந்து வளரும் பூக்கும் காய்க்கும். அது போல, முன்னேற வேண்டும் என்ற எழுச்சியும் ஆர்வமும் உடையவனுக்கு ஒரு சிறு உதவி கிடைத்தாலும் அதைப் பற்றிக் கொண்டு அதனைப் பற்றுக் கோலாகக் கொண்டு வளர்வான்-முன்னேறுவான். முன்னேற்றத்திற்கு முயற்சியும், உதவியும் எவ்வளவு அவசியமோ அதைவிட ஆர்வம் அவசியம்.