பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 16.pdf/40

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

28

தவத்திரு குன்றக்குடி அடிகளார்


தமிழ்நாடு தெய்விகப் பேரவைக்கு முதல் தலைவராக சிறப்பான முயற்சியின் பயனாகத் தருமைக் கயிலைக் குருமணி அவர்கள் தேர்ந்தெடுக்கப்பெற்றார்கள். அவர்கள் தொடர்ந்து மூன்றாண்டுகள் அந்தப் பொறுப்பில் இருந்தார்கள். அதன் பிறகு நாம் பேரவைத் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பெற்றோம். பேரவைத் தலைவராகத் தேர்ந் தெடுக்கப் பெறும் பொழுது நாம் தமிழ்நாடு சட்டமன்ற மேலவை உறுப்பினராக இருந்தோம். டாக்டர் கலைஞர் அவர்கள் நம்முடைய சமுதாய எண்ணங்களைப் பாராட்டும் வகையில் தமிழ்நாடு சட்ட மேலவை உறுப்பினர் பதவிக்கு நம்முடைய பெயரை ஆளுநருக்குப் பரிந்துரை செய்தார்கள். தமிழ்நாடு தெய்விகப் பேரவையின் வளர்ச்சிக்குக் கடுமையாக உழைத்தோம். பேரவை, நாடு முழுதும் ஆல்போல் தழைத்து வளர்ந்தது. பேரவை வளர்ச்சியில் அதிகமாக ஈடுபட்டதால் நமக்கும் நம்முடைய நிறுவனங்களுக்கும் வளர்ச்சியில் பாதிப்பு ஏற்பட்டது. அருள்நெறித் திருக்கூட்டத்தின் வளர்ச்சி பாதித்தது. ஆயினும், இது அனைவரும் சேர்ந்து செய்யும் பொதுப்பணி என்பதால் கடுமையான உழைப்புக் கொடுத்து வளர்த்தோம். நம்முடைய சமுதாய - சமயச் சீர்திருத்தக் கருத்துக்களுக்குப் பேரவை வாயிலாக மக்கள் மன்றத்து ஏற்பினை அல்லது அங்கீகாரத்தினைப் பெற்று வந்தோம். இந்தச் சூழ்நிலையில் பேரவை தொடங்கிய காலத்தில் ஆர்வத்தோடு பங்கேற்ற காஞ்சி காமகோடி பீடம், தருமையாதீனம் மகாசந்நிதானம் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பெற்றபிறகு பேரவைக் கூட்டங்களுக்கு வருவதில்லை. அதே போழ்து, உடன்பாடின்மையையும் காட்டிக்கொள்வதில்லை. நாம் தலைவராக வந்த பிறகு - தீவிரக் கொள்கைகள் பேரவையின் கொள்கைகளான பிறகு - காஞ்சி காமகோடி பீடத்தின் புதியவர் வந்தபிறகு பேரவைக்கும் காமகோடி பீடத்துக்கும் உள்ள இடைவெளி அதிகரித்தது. இந்த நிலையில் தமிழ்நாடு