பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 16.pdf/457

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

எங்கே போகிறோம்!

445



பழமை இன்றையத் தலைமுறைக்கு உணவாக இயலாது. ஆனால் உட்டமேற்றும் உரமாகும். புதுமை படைப்போம்! புதியதோர் உலகைச் செய்வோம்! சாதிகளை அகற்றுவோம்! குலம், கோத்திரங்களை மறப்போம்! ஒன்றே குலம் - ஒருவனே தேவன் என்போம்! புவியை நடத்துவோம்! பொதுவில் நடத்துவோம்! மனிதகுல சமநிலை காண்போம்! மார்க்சியம் கற்போம்! வள்ளுவம் கற்போம்! இவ்விரண்டு தத்துவங்களும் இணைந்த சமுதாயம் காண்போம்!

எல்லோருக்கும் எல்லாப் பெருஞ் செல்வமும் அடையும்படி செய்வோம்! வல்லாருக்கும் மாட்டாருக்கும் ஒருங்கே வாழ்வளிப்போம்; ஒத்தாரும், உயர்ந்தாரும் தாழ்ந்தாரும், எவரும் ஒருங்கிணைந்து உலகியல் நடத்துவோம்! கணியன் பூங்குன்றன் வழி, பெரியோரை வியத்தல் செய்வோம்! சிறியோரை இகழ்தல் அதனினும் இலம்! நாளும் புதியன கற்போம்! புதியன படைப்போம்! இன்றைய பணிகளை, இன்றைய கருவிகளைக் கொண்டே செய்வோம்! இல்லாதவர் இல்லை என்று செய்வோம்!

அப்பரடிகள் கூறியவாறு, "இன்பமே எந்நாளும் - துன்பமில்லை” என்று வாழ்வோம்! இந்த மண்ணில் விண்ணரசு காண்போம்!

‘சுதந்திரம் விலைமதிக்க முடியாதது. உலகம் முழுவதும், பல நூறு ஆண்டு காலம் மக்கள் போராடிச் சுதந்திரத்தைக் கண்டனர். 18-ம் நூற்றாண்டில், பிரஞ்சு தேசத்தில் நடந்த புரட்சி, மனித குலத்திற்கு மூன்று மந்திரங்களை வழங்கின. அவையாவன சுதந்திரம், சமத்துவம், சகோதரத்துவம் என்பன. இவையே இன்றைய மனித உலகத்தின் தாரக மந்திரங்கள். இதன் பின் உலகம், சுதந்திரக் காற்றைச் சுவாசிக்கத் தொடங்கியது.

இன்று நமது நாடு சுதந்திர நாடு! நாமே, நமக்கென்று நம்மை ஆள்வதற்கென்று ஆட்சி அமைக்கின்றோம். இன்று நமது நாட்டில் சுதந்திரத்தின் அருமை பலருக்குத் தெரிய