பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 16.pdf/460

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

448

தவத்திரு குன்றக்குடி அடிகளார்


கேட்கும் ஆர்வத்தைத் தூண்டும். யாரோடும் பகை கொள்ளாத பண்பாடே வெற்றி தரும்.

வாழ்க்கை குறிக்கோளுடன் அமைக்கப் பெற்றது என்பது வாய்த்திருக்கும் கருவிகளைப் பொருத்தே உணரப்படும் உண்மை. மானுடம் ஒரு பிறவி, மானுடம் வெற்றி பெற வேண்டும். வெற்றி பொருந்திய வாழ்க்கைக்குக் குறிக்கோள் தேவை. குறிக்கோள் இமயம் போல உயர்ந்ததாக இருக்க வேண்டும். யானையைக் குறி வை! அடிபடுவது கொசுவாக இருந்தாலும் பரவாயில்லை. குறிக்கோள் உயர்வாக அமைய வேண்டும்.

பல நூறு ஆண்டுகளாக நம்முடைய சமுதாயத்தை வருத்தி வரும் தீண்டாமை, சாதிப் பிரச்சனைகள், மதப் பிரிவினைகள், அறியாமை, வறுமை முதலியன. சுதந்திரம் வந்த பிறகும் அகன்ற பாடில்லை. இந்தப் புன்மைகளை யெல்லாம் அகற்றி, ஒரு புதிய உலகத்தைப் படைப்பதை இலட்சியமாகக் கொள்வோம்!

புவியை நடத்துவோம்! பொதுவில் நடத்துவோம்! கூடி வாழ்தல் ஒரு பண்பு; நாகரீகம்; கூட்டுறவு உழைப்பை ஊக்குவிக்கும்; கோடி நன்மை தரும்; கூட்டுடமைச் சமுதாயமே எல்லோரும் எல்லாச் செல்வமும் பெற வழி செய்யும் வகை செய்யும்; கூட்டுடமைச் சமுதாயமே பொதுநலம் காண வழி!

காலம் வாழுங் காலம் மிக மிகக் குறைவு. வாழ்க்கையின் தொடக்கத்தில் பல ஆண்டுகள் குழந்தைப் பருவத்தில் கழிந்து போகின்றன. வாழ்க்கையின் பிற்காலத்தில் பல ஆண்டுகள் ஓய்வில், முதுமையில், கழிந்து போகின்றன. இடையில் 40 ஆண்டுகள் தாம் வாழும் காலம். காலத்தை விலை மதிப்புள்ளதாக ஆக்கவேண்டும்.

இளமையில் படித்தது வாழ்க்கை முழுவதையும் நடத்தப் போதாது. நாள்தோறும் புத்தறிவு தேவை. நாள்தோறும் பழைய இலக்கியங்களைப் படிக்கவேண்டும். நாள்தோறும் புதிய அறிவியல் நூல்களைத் தேர்வு செய்து