பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 16.pdf/488

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

476

அடிகளார் நூல்களுக்கு அறிஞர்கள் வழங்கிய உரைகள்


பெறுதற்குரிய வாயில்களில் முதன்மையானது சிந்தனை(பக்.13) என்று அறிவுறுத்துகிறார்.

‘வாழ்க்கை என்ற மாளிகைக்கு ஒழுக்கம் ஒளியூட்டுகிறது' (பக்.17) என்று வாய்மையின் தேவையை வலியுறுத்துகிறார். 'வாழ்க்கை வளர, இன்பமுற வாழ அறிவறிந்த ஆள் வினை தேவை' (பக்.22) என்று முயற்சியின் பெருமையைக் காட்டுகிறார். 'கற்றல்-கேட்டலின்' மூலம் பெறும் அறிவு என்ன இருந்தாலும் கடன் வாங்கிய பிழைப்பே. நினைத்தலின் மூலம் பெறும் அறிவே உண்மை அறிவு. (பக்.30) என்று மனத்தின் செயலாகிய எண்ணிச் செய்தலை எடுத்துரைக்கிறார்.

இவைகள் எல்லாம் மனத்தை மாளிகையாக்கும் வழிக்குரிய படிகளாம். இப்படிகளை நாம் எங்ஙனம் பெறுவது? அதற்கும் ஆசிரியர் வழி கூறாமலில்லை. கல்விக்குரிய நூல்களும் கற்பதற்குரிய நூல்களும் அறிந்து கற்றல் வேண்டும் என்கிறார். சங்க இலக்கியங்களும், சிலம்பு முதலிய காப்பியங் களும், திருக்குறளும், தேவரார திருமுறைகளும், ஆழ்வார்களின் பிரபந்தங்களுமே அவை என்று சுட்டிக் காட்டுகிறார்.

'தன்னை அறிந்தால்' பிறிதொன்றால் ஆங்கு யாதொரு தீமையும் இல்லை. இதனால்தான் கணியன் பூங்குன்றனார் என்ற பெரும்புலவர் புறநானூற்றில் 'தீதும் நன்றும் பிறர்தர வாரா' என்றார் (பக்.52) என்று எடுத்துக்காட்டி அதுவே பேரின்பம் என்று விளக்குகிறார். வள்ளுவம் ஏன் பிறந்தது என்ற வினாவை எழுப்பிக் கொண்டு “வள்ளுவம் பதவுரை பொழிப்புரைக்காகப் பிறக்கவில்லை, மண்செழிக்க மழை பொழிவது போல மனிதகுலம் செழிக்க-மனித குல உள்ளங்கள் செழிக்க - உலகு செழிக்க - உயர் கடவுள் சிரித்து மகிழ வள்ளுவம் பிறந்தது" (பக்.55) என்று ஆணித்தரமான விடையும் கூறுகிறார்.