பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 16.pdf/506

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

494

அடிகளார் நூல்களுக்கு அறிஞர்கள் வழங்கிய உரைகள்


அணிந்துரை
(திருவருட் சிந்தனை)


இராம. வீரப்பன்
அறநிலையத் துறை முன்னாள் அமைச்சர்

அண்ணல் காந்தியடிகள், பிரார்த்தனையின் சிறப்பைப் பற்றிக் கருத்து தெரிவித்த பொழுது, "உண்ணாமலும், நீர் பருகாமலும் கூட என்னால் இருந்து விட முடியும். ஆனால் இறைவனைப் பிரார்த்தனை செய்யாமல், ஒரு நொடி கூட என்னால் இருக்க முடியாது” என்று குறிப்பிட்டார்கள்.

அண்ணலின் வழியில் தவத்திரு குன்றக்குடி அடிகளாரும் ஆண்டு முழுவதும் மாந்தர்கள் எத்தகைய பிரார்த்தனைகளில் ஈடுபட்டு வாழ வேண்டும் என்பதைச் சிந்தித்து "திருவருட் சிந்தனை" என்ற அருமையான நூலை.... பிரார்த்னை நூலாய்ப் படைத்துள்ளார்கள்.

பக்தி இலக்கியத்தில் உள்ள ஒரு தொடர் “சிந்தனை 'உனக்குத் தந்தேன். திருவருள் எனக்குத் தந்தாய்” என்பதாகும்.

தவத்திரு அடிகளார் நற்சிந்தனையை இறைவனுக்குக் காணிக்கையாக்கி திருவருளை இறைவனிடமிருந்து பெற்று "திருவருட் சிந்தனைகளை” நமக்கெல்லாம் வழங்கியிருக் கின்றார்கள்.

இறைவனைப் பேசாத நாளெல்லாம் பிறவாத நாளாக அடியார்கள் எண்ணுவதுண்டு.

“இறைவா இறைவா” என்று ஒவ்வொரு நாளையும் பிரார்த்தனையோடு தொடங்கி, பிரார்த்தனையுடனே மனிதர்கள் முடிக்க வேண்டும் என்ற பெருநோக்கில் அடியார்களின் நிலையில் தம்மை வைத்து, அடியார்களுக் காகப் பல்வேறு பிரார்த்தனைகளை அடிகளார் படைத் திருப்பது போற்றுதற்கு உரியதாகும்.