பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 16.pdf/76

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

64

தவத்திரு குன்றக்குடி அடிகளார்


பெரும்பாலும் நிகழ்வுகள் மலடாவதில்லை. அதுபோலவே, பழமையும் உயிர்ப்புடன் உலா வந்தால் அது பழமையல்ல, அந்தப் பழமையே புதுமையாக பரிணமிக்கிறது. புதுமையாகப் பரிணமிக்காத பழமையாக இருப்பின் அந்தப் பழமை ஒன்றுக்கும் ஆகாது. நமக்கு உயிர்ப்பு வேண்டும். வாழ்ந்தாக வேண்டும். வையகத்தோடு இணைந்து வாழ வேண்டும். கடந்த காலம் மிகக்குறுகிய எல்லையுடையதே. ஆயினும் பலரைச் சந்தித்திருக்கின்றோம். கலந்து பேசியிருக் கின்றோம். அவர்களுக்கு நாம் பயன்பட்ட நிகழ்ச்சிகள் உண்டு. அவர்களை நாம் பயன்படுத்திக் கொண்ட நிகழ்ச்சி களும் உண்டு, இன்று மட்டும் என்ன? என்றுமே மறக்க முடியாது, நினைந்து அசைபோட முடியும்.

நமது வாழ்க்கையின் தொடக்க காலத்திலிருந்தே நிகழ்வுகள் ஒன்றன்பின் ஒன்றாக நிகழ்ந்துள்ளன. ஏன், விரைவாகக்கூட நடந்து வந்துள்ளன. பண்ணைக்காரராக வாழ விரும்பிய நமக்கு அது கொடுத்து வைக்கவில்லை! ஆனால், பெரிய பண்ணை கிடைத்திருக்கிறது. நமது வாழ்க்கைப் போக்கைக் கூர்ந்து. பார்த்தால் முரண்பாடுகளுக்கிடையே செல்வதை உணர முடியும்! ஏன் இந்த முரண்பாடு?

இவையெல்லாவற்றையும் ஆராய்ந்து எழுதும் முயற்சி இது. மதிப்பீடு செய்யவேண்டியது வாசகர்களின், பொறுப்பும் கடமையுமாகும்!

இது சுயசரிதையும் அல்ல... சுயவிளம்பரமும் அல்ல, நமது வாழ்க்கையில் நடந்த சில நிகழ்ச்சிகளின் வழி, எதிர்காலச் சமுதாயத்துக்குப் பயன் படக்கூடிய வித்துக்கள் இக்கட்டுரைகள் வாயிலாகக் கிடைக்கும் என்று நம்புகின்றோம்!

சுதந்திரத்துக்கும் ஆனந்தத்துக்கும் தொடர்பு உண்டு. அதனால்தான் பாரதி, 'ஆனந்த சுதந்திரம்' என்றான்.