பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 2.pdf/48

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

44

தவத்திரு குன்றக்குடி அடிகளார்


தன்னயத்தால் தளர்ந்திருக்கிறது; சுகவுணர்வில் சோர்ந்து கிடக்கிறது. ஐயோ, பாவம்!

வயிறு பசிக்காது போனால் அவர்களுக்கு உணவைப் பற்றிக் கூட நாட்டமிருக்காது. இத்தகையோர் வாழ்கிறார்கள், அல்லர்; பிழைப்பை நடத்துகிறார்கள்; மற்றவர்க்கும் சுமை யாக இருக்கின்றனர். ஏன்? எண்ணத்தெரியாத காரணமே! ஏன் எண்ணத்தெரியவில்லை? வாழ்க்கைக்கு நோக்கம் கற்பித்துக் கொள்ளவில்லை. மனத்தை மட்டும் கடமைகளைச் சுற்றி எண்ணப் பழக்கிவிட்டால் இந்த உலகத்தில் நடவாதது எது?

மனம், மிக்க நுட்பமான ஒர் உறுப்பு, அது நுட்பத்தினும் திட்பமுடையது; காலத்தை-எல்லையைக் கடந்து செல்லும் தன்மையது. உலகத்தில் விரைந்து செல்லும் தன்மையன இரண்டு. ஒன்று மனம்; மற்றொன்று காற்று. இவ்விரண்டும் இன்றி வாழவே முடியாது. இவ்விரண்டும் வாழ்விக்கும் தகுதியும், கெடுக்கும் தகுதியும் உடையன.

மனம், பல்வேறு தொழில்களையுடையது. குறிப்பாக நினைப்பு என்பது மனத்தினுடைய மிகச் சிறந்த தொழில். மனித வாழ்க்கையில் நினைப்பு, பயனுடைய அகத்தொண்டு. நினைத்தல்-தொழில் ஒருவகையானது அல்ல. பல பொருள் தன்மையது. அறிவுப் பெருக்கத்திற்கு, கற்றலும் கேட்டலும் துணை செய்தலைப்போல, நினைத்தலும் துணை செய்யும். அதுமட்டுமல்ல. அறிவு வளர்ச்சிக்குக் கற்றல்-கேட்டலை விட நினைத்தல் மிக்க பயனைத் தருகிறது.

கற்றல்-கேட்டலின் மூலம் பெறும் அறிவு, என்ன இருந்தாலும் கடன் வாங்கிய பிழைப்பே நினைத்தலின் மூலம் பெறும் அறிவே, உண்மை அறிவு. முன் இரண்டின் வழிப்பட்ட அறிவு, முற்றிலும் முழுமையாகி விடுவதில்லை. நினைத்தலின் மூலம் பெறும் அறிவே முழுமையான