பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 2.pdf/54

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

50

தவத்திரு குன்றக்குடி அடிகளார்



கண் வழியாக உயிர் எத்தகைய பேறுகளைப் பெற வேண்டுமோ அவைகளைப் பெறாத, அதற்கு மாறான கல்லாதான்கண்கள் துன்பங்களைச் சேர்ப்பதால் புண் என்றார். இது திருவள்ளுவர் கல்வியின் அவசியத்தை எதிர்மறையால் உணர்த்தியதாகும்.

அடுத்து, உடன்பாட்டில் உணர்த்தும் குறள் ஒன்றும் கவனத்திற்குரியது. கற்க என்று ஐயத்திற்கிடமின்றி ஆணையிடுகின்றார். ஆம்! உண்ணும் பழக்கத்தை மனிதன் மேற்கொண்டிருப்பதைப் போல நாள்தோறும் நல்ல நூல்களைக் கற்கும் பழக்கத்தை மேற்கொள்ள வேண்டும்.

எத்தகைய நூல்களைக் கற்பது: கற்கும் நூல்கள் இரு வகையின. ஒன்று கற்கும் பயிற்சியைப் பெறக் கற்கும் புத்தகங்கள். இவைகளே பள்ளிகளின்-கல்லூரிகளின் பாடப் புத்தகங்கள்! அடுத்து, உயிர்க்கு நலம் சேர்க்கும் நூல்களைக் கற்றல் பிறிதொரு வகை.

இத்தகைய நூல்கள் மனிதனுக்கு மனிதன் மாறுபடலாம். இயல்பில் மனிதர்க்குச் சில குறைகள் உண்டு. இக்குறைகள் மனிதர்க்கு மனிதர் மாறுபடுவது இயற்கை ஆதலால், ஒவ்வொரு மனிதனும் தன்னுடைய உயிர்ச் சார்பான உள்ளத்தின் குற்றங்குறை யறிந்து அக்குற்றங் குறைகளை நிறைவு ஆக்குதற்குரிய நூல்களாகத் தேர்ந்தெடுத்துக் கற்றல் வேண்டும்.

தன்னிடம் உள்ள குற்றங்கள் நீங்குகிறவரையில் கற்க வேண்டும். குற்றங்களினின்று நீங்கி நிறை நல்வாழ்க்கைக்கு வந்த பிறகு, மீண்டும் பழக்க வாசனையால் பழைய வாழ்க்கைக்குப் போகாமல் நிறை நல்வாழ்க்கையில் நிலைத்து நிற்க வேண்டும். இதனைத் திருவள்ளுவர்,