பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 2.pdf/80

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

76

தவத்திரு குன்றக்குடி அடிகளார்



வள்ளுவர் காலத்தில் மனிதர் பூசித்தது தெய்வத்தை பூசிப்பவன் சாத்தான். ஆனால், பூசனையால் வரும் பயனென்ன? தெய்வ மணம் கமழும் இன நலம் உடையவனே தெய்வத்தைப் பூசித்தற்குரியவன். சாத்தானின் இடம் சுடுகாடு.

தெய்வங்களின் இடம் மனித இனம் நடமாடும் மலர்ச்சோலை; திருக்கோயில்கள். ஆதலால், சாத்தானாக விளங்கும் மனிதனைத் தெய்வமாக்கவே வள்ளுவம் பிறந்தது. ‘வாழ்வாங்கு வாழ்பவன் வானுறையும் தெய்வம் என்று வள்ளுவம் பேசுகிறது.

வள்ளுவம் ஏன் பிறந்தது? என்று இதயத்தில் பட்டதை எழுதியிருக்கின்றோம். வள்ளுவம், பதவுரை பொழிப்புரைக் காகப் பிறக்கவில்லை. மண் செழிக்க மழை பொழிவதுபோல, மனிதகுலம் செழிக்க-மனிதகுல உள்ளங்கள் செழிக்க-உலகு செழிக்க-உயர் கடவுள் சிரித்து மகிழ வள்ளுவம் பிறந்தது!

முடிந்தால்-மனமிருந்தால் வள்ளுவம் பிறந்ததன் பயனையடைய வழி காணுங்கள்! வையகம் சிறக்கும்! அல்லது வழக்கம் போல வாழ்த்துரைகளில் வாணாளை வீணாக்குங்கள்! அது உங்கள் விருப்பம்! வள்ளுவரே, ஏவவும் செய்கலான் தான் தேரான் என்று நொந்து கூறியுள்ள பொழுது நாம்தான் என்ன செய்யமுடியும்?

சிறப்புஈனும் செல்வமும் ஈனும் அறத்தினுரஉங்கு
ஆக்கம் எவனோ உயிர்க்கு.

அறத்தான் வருவதே இன்பம்மற் றெல்லாம்
புறத்த புகழும் இல.

ஒல்லும் வகையான் அறவினை ஒவாதே
செல்லும் வாயெல்லாம் செயல்.