பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 3.pdf/353

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

அடிகளார் மடல்



341


விவாதித்து முடிவெடுக்க வேண்டிய பொருள் இது. எழுத்துச் சீர்திருத்தம் பற்றி அண்மைக்காலமாக, பெரியார் நூற்றாண்டு தொடக்கத்திலிருந்து ஒரு அறிஞர் குழு தொடர்ந்து கலந்துரையாடல்களையும் விவாதங்களையும் நடத்தி வருகிறது. அதே போழ்து தமிழ் எழுத்துச் சீர்திருத்தம் தேவையற்றது என்பது ஒர் அணியின் கருத்து.

இனிய செல்வ! இந்தச் சூழ்நிலையில் தமிழ்நாடு அரசு, தமிழ் எழுத்துச் சீர்திருத்தம் பற்றி ஆராய்ந்தும் மக்கள் கருத்தறிந்தும் தமிழ்நாடு அரசுக்குப் பரிந்துரை செய்ய ஒரு ஆய்வுக்குழுவை அமைத்திருக்கலாம். அந்த ஆய்வுக் குழுவின் பரிந்துரைகளை அரசு மேலும் ஆராய்ந்து முடிவெடுப்பதே முறையான செயல்! இதனால் எழுத்துச் சீர்திருத்தம் பற்றி ஒரு பரவலான விவாதம் நடந்திருக்கும். இருவேறு கருத்துகளைச் சீர்தூக்கி ஆய்வு செய்யவும் வாய்ப்புக் கிடைத்திருக்கும்.

தமிழ் எழுத்துச் சீர்திருத்தம் வேண்டுமா? வேண்டாவா என்ற வினாவிற்கு உணர்ச்சி வசப்பட்ட நிலையில் விடை காண இயலாது; அறிவார்ந்த ஆய்வின் அடிப்படையில் முடிவு காணல் வேண்டும். இப்பொழுதும் ஒன்றும் காலம் நழுவி விடவில்லை; தமிழ்நாடு அரசு ஆய்வுக்குழுவை அமைக்க வேண்டுமென்பது நமது வேண்டுகோள். அங்ஙணம் இன்றி ஒருதலைப் பட்சமாகத் தமிழ் எழுத்துச் சீர்திருத்தம் இல்லை என்று அறிவிப்பது நன்மரபாகாது. நேற்றைய அறிவு சிறந்ததுதான். ஆனால் இன்றைய அறிவுக்கு, நேற்றைய அறிவு ஈடுகொடுக்குமா என்பதையும் ஆய்வு செய்தல் வேண்டும். இனிய செல்வ! தமிழக முதல்வர் டாக்டர் கலைஞர் அவர்கள் ஓர் ஆய்வுக்குழுவை அமைத்து முன்வர வேண்டும் என்பதே நமது வேண்டுகோள்.

"அறிதோறு அறியாமை கண்டற்றால்”

என்னும் திருக்குறள் அடி நினையத்தக்கது.

இன்ப அன்பு
அடிகளார்