பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 3.pdf/411

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

அடிகளார் மடல்



399


57. மார்க்சியம் தோற்றுவிட்டதா?

இனிய செல்வ,

சோவியத் நாட்டில் கவலை தரத்தக்க நிகழ்ச்சிகள் நடைபெறுகின்றன. ஆம்! கொர்பசேவின் மறுசீரமைப்புக் கொள்கைக்குச் சோதனை ஏற்பட்டுள்ளது. அது மட்டுமா? மனித குலத்தின் சிக்கல்களுக்குத் தீர்வுகாண வழிகாட்டும் மார்க்சியத்துக்கும் சோதனை ஏற்பட்டுள்ளது. இனிய செல்வ, இவையெல்லாவற்றையும் நாம் வியப்புடனோ அல்லது வருத்தத்துடனோ பார்க்கவில்லை! மனித குலத்தின் கடந்தகால வரலாற்றை நோக்கின் இது வரலாற்றின் நிகழ்வு தான்! அதிசயம் ஒன்றும் இல்லை! என்று எண்ணுகிறோம்.

ஆம்! மனிதகுலம் எப்போதும் ஒன்று பட்டதில்லை; ஓரணியாக நின்றதில்லை! மனிதன் குழு மனப்பான்மையுடையவன். எப்பொழுதும் ஓரமைப்பில் உள்ளவர்கள் கூட ஒன்றாக இருக்கமாட்டார்கள். ஏன்? "புகழ் வேட்டை”யே காரணம். குழுச் சண்டைகளில் ஈடுபடுவோருக்குச் செல்வாக்கு அதிகம். வரவேற்பு இருக்கும். இரத்த வேட்கையுடைய கழுகு சும்மா இருக்காது அல்லவா? இனிய செல்வ, கூடிச் சிந்தனை செய்தல், தனிக்கருத்துக்கு மதிப்பளித்தல், கலந்து பேசுதல், கருத்துப் பரிமாற்றம் செய்தல், தெளிந்த நிலையில் ஒரு முடிவுக்கு வருதல், அந்த முடிவை அனைவரும் ஏற்றுக் கொள்ளல் என்பன சமூக வாழ்வியலின் நீதி! இந்த நீதிக்கு இன்று யார் உடன்படுவர்? உள்ளம் செத்தால் என்ன? உண்மை ஒளிந்து கொண்டால் என்ன? "தான்" ஒரு விளம்பரப்பொருளாக வேண்டாமா? தன்னுடைய தகுதியின்மையை-நிறையின்மையை வெளிச்சம் போட்டு மறைக்க வேண்டாமா? ஆதலால். ஒன்று சேர மாட்டார்கள்! உட்கார்ந்து பேசி உறவை வளர்க்க மாட்டார்கள்! இது மாந்தரின் இயல்பு!