பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 4.pdf/202

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

198

தவத்திரு குன்றக்குடி அடிகளார்


என்றார். குற்றத்தைக் கடிய வேண்டுமே தவிர, குற்றமுடையானை வெறுக்கக் கூடாது.

இது திருவள்ளுவருடைய அரசிலே இருந்த மிகச் சிறந்த அமைப்பு. இன்னும் சிறந்த அமைப்பு, தண்டிக்கவும் வேண்டும்; ஆள் உடம்பும் வலிக்கக்கூடாது. எவ்வளவு நாகரிகமாகப் பேசுகிறார்.

நாட்டிலே ஒரு பழமொழி சொல்லுவார்கள், "கோலும் ஒடியக் கூடாது, பாம்பும் சாகக்கூடாது" என்று. கருணை மறவன் என்று இளங்கோவடிகள் கோவலனைச் சிறப்பிக்கிறார். மணிமேகலையின் பிறந்த நாளைக் கொண்டாடிக் கொண்டிருக்கிறார்கள். முதிய பார்ப்பனர் ஒருவர் தானம் வாங்க வருகிறார். அரசு யானை கட்டிலிருந்து அறுத்துக் கொண்டு மதம் பிடித்துத் தன்னிச்சையாக வருகிறது. அது வழியிலே வருகிற முதிய பார்ப்பனரை மிதித்துவிடும் போலத் தெரிகிறது. இந்த முதிய பார்ப்பனர் ஓட முடியாமல் அந்த யானையினுடைய பிடிக்குள்ளே அகப்பட்டுவிட்டார். தூரத்திலிருந்து கோவலன் பார்க்கிறான். அந்த முதிய பார்ப்பனரைக் காப்பாற்றவேண்டும் என்ற எண்ணம்-கருணை கோவலன் நெஞ்சிலே வருகிறது.

அவரைக் காக்க வேண்டும் என்று எண்ணும் பொழுதே, வேலை எடுத்து வீசி, யானையைக் கொன்று, அவரைக் காப்பாற்ற வேண்டும் என்ற உணர்ச்சி வரும். பார்ப்பனர் காப்பாற்றப்பட வேண்டும், யானையும் சாகக் கூடாது, தானும் சாகக்கூடாது. இது கோவலனுடைய விருப்பம்.

ஆக, மூவரும் காப்பாற்றப்பட வேண்டும் என்ற குறிப்பிலே யானைக்கு அருகில் சென்று யானையையும் கொல்லாமல், பார்ப்பனரை விடுதலைசெய்து, யானையினுடைய கரத்தைப் பிடித்து, யானையின்மீது ஏறி அதை அடக்குகிறான்.