பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 4.pdf/276

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

272

தவத்திரு குன்றக்குடி அடிகளார்


நமக்கு முழு உரிமை இருக்குமானால் முடியாத தொன்றில்லை.

உள்ளமோ, விந்தையான பொருள். அது கைக்கு அகப்படுவதில்லை. விரைவில் பயணம் செய்கிறது; கடிதில் பற்றுகிறது; துன்பத்தை இன்பம் போலக் காட்டுகிறது. தனி உணர்வை வளர்க்கிறது. ஆயினும் உள்ளத்தைக் கெட்ட தென்று சொல்ல முடியாது. "நீ நாளும் நினையாய் நன்னெஞ்சே!” என்று திருஞானசம்பந்தரும் நெஞ்சைக் குறிப்பிடுகிறார். அதை முறையாகப் பழக்கப்படுத்தினால் நல்ல வேலை செய்யும்; கைக்கு அடக்கமாக வைத்துக் கொண்டிருந்தால் அதனிற் சிறந்த தோழமை இல்லை. ஆனால், அதை எஜமானன் ஆக்கினால் வந்தது கேடு.

உள்ளத்தை ஒரு பொழுதும் ஓயவிடக் கூடாது. அதற்கு ஒழுங்காக முறைவைத்து வேலை கொடுத்துக் கொண்டிருக்க வேண்டும். அதற்குரிய நல்ல வேலைகளைக் கொடுக்காது, உறங்க வைத்தால் அது உறங்குவதில்லை. ஊர் சுற்றப் புறப்பட்டுவிடும். உள்ளத்திற்கு நல்ல சிந்தனைகளையும், கருத்துக்களையும் உணவாகத் தர வேண்டும். அன்பினை நீராக வார்க்க வேண்டும். இனிய செயலினை, அதன் மூச்சாக ஆக்கவேண்டும். உயர்ந்த பக்தியினை, அதன் உயிர்த் துடிப்பாக ஆக்கவேண்டும். அப்பொழுது உள்ளம் செழித்து வளரும்; வாழ்க்கையும் பூத்துக் குலுங்கும். மனித சமுதாயம் அனைத்தும், உறவு கலந்து, உண்டு களித்து வாழும். எங்கும் இன்ப அன்பு மலர்ந்து மணம் பரப்பும்.

“உள்ளுவ தெல்லாம் உயர்வுள்ளல் மற்றது
தள்ளினும் தள்ளாமை நீர்த்து.”

596