திருக்குறள் காட்டும் நீதி
309
பலர். இந்தியாவை ஒரு நாடாக வெற்றி கொண்டு ஆள விரும்பியவர் பலர்.
அசோக சக்கரவர்த்தி இதில் ஓரளவு வெற்றி பெற்றார். ஆயினும் முழு வெற்றி பெறவில்லை. தமிழகத்தை வெற்றி கொள்ள இயலவில்லை.
பிரிட்டிஷ் அரசுதான் முதன் முதலாக இந்தியாவை ஒரு நாடாக “இந்தியா” என்று ஆக்கியது. இந்தியாவை உருவாக்கிய பெருமை பிரிட்டிஷாருக்கே உண்டு.
பிரிட்டிஷார் உருவாக்கிய இந்தியாவில் கூட ஆங்காங்கு பிரிட்டனின் ஆதிக்க வரம்புக்குக் கட்டுப்பட்ட தன்னாட்சி சமஸ்தானங்கள் இருந்தன. நாடு சுதந்திரம் பெற்ற பிறகுதான் இந்தியாவின் இரும்பு மனிதர் என்று புகழ் பெற்ற வல்லபாய்படேலின் அரிய வரலாற்றுப் புகழ் மிக்க முயற்சியால் இந்தியா ஒரு நாடாயிற்று.
இன்று இந்தியா ஒரு நாடுதான். ஆயினும் இந்தியாவில் வாழ்கின்றவர்கள் அனைவரும் இந்தியர் ஆகவில்லை. நமது நாட்டு மதங்கள் அனைத்தும் தன்னிலைப் பராமரிப்பு என்ற பெயரில் சாதி, மத உணர்வுகளையே பாதுகாத்து வருவது ஒரு காரணம். இந்து சமயம் இதில் முதல் நிலை வகிக்கிறது.
பிற சமயங்களிலும் சாதி முறைகள் வெளிப்படையாக இல்லையானாலும் அகநிலையில் பேணப்படுகின்றன. பேசப்படுகின்றன என்பதே உண்மை. ஆதலால், இந்தியன் என்ற உணர்வை விட இந்து என்ற உணர்வும், இந்தியன் என்ற உணர்வைவிட கிறிஸ்துவர் என்ற உணர்வும், இந்தியன் என்ற உணர்வைவிட இஸ்லாமியர் என்ற உணர்வுமே மேலோங்கி நிற்கிறது.
இந்த மூன்று சமுதாயத்தினரும் சம நிலையில் ஓரிடத்தில் கூட்டமாகக் கூடி அமர்ந்து சமுதாய நலன்களை நாட்டு நலன்களைப் பற்றிப் பேசும் பழக்கமே உருவாகவில்லை.