பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 4.pdf/326

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
11
பெரியாருக்குப் பிடித்த குறள்!

1969-ஆம் ஆண்டு, ஒரு நாள் தலைவர் தந்தை பெரியார் அவர்களும் நாமும் ஒரே காரில் மதுரையிலிருந்து திருநெல்வேலிக்குச் சென்று கொண்டிருந்தோம். திருப்பரங்குன்றத்தைக் கடந்தவுடன் ஐயா அவர்கள் தமது சட்டைப் பையில் வைத்திருந்த திருக்குறள் மூலநூல் ஒன்றை எடுத்தார்கள். அதில் “குடிசெயல் வகை” என்ற அதிகாரத்தை நம்மிடம் தந்து படிக்கும்படி சொன்னார்கள். அதில் அவர்கள் படிக்கச் சொன்ன குறள் இன்னும் நம் நினைவில் பசுமையாக இருக்கிறது.

‘குடிசெய்வார்க்கு இல்லை பருவம்; மடிசெய்து
மானம் கருதக் கெடும்.’

(1028)

என்பது அத்திருக்குறள். நாம் குறளைப் படித்துவிட்டு ஐயா அவர்களின் முகத்தைப் பார்த்தோம். ஐயா அவர்கள் அதற்குப் பொருள் கேட்டார்கள். நாம் தயங்கினோம். ஐயா அவர்களிடமிருந்து பொருள் கேட்பதற்காக! அவர் கூறும் பொருள் நடைமுறைப் பட்டறிவிலிருந்து தோன்றி, பகுத்தறிவிற் சிறந்து விளங்குமல்லவா? அதற்காகத்தான்!