பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 5.pdf/145

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

134

தவத்திரு குன்றக்குடி அடிகளார்


ஒருமித்த நிலையில் ஈடுபட்டால் அப்பணி சிறக்கும்; பயன்களைக் குவிக்கும்; புகழைத் தரும்.

ஆதலால், பயன் தருவன சித்தத்தின் நிகழ்வனவாகிய சிந்தனையும், புத்தியின் நிகழ்வும், மனத்தின் இயக்கமுமே யாம். உயிரின் நுண்ணுடம்பின் அறி கருவிகளின் நிகழ்வுக்குரிய பதிவுகள் உள்ளடங்கிக் கிடந்து அப்பதிவுகள் செயற்பாடுகளாக உருப் பெருவதற்குரிய காலம் வரும் பொழுது, புலன்கள், பொறிகளின் வாயிலாகச் செயற் பாட்டுக்கும், பயனுக்கும் வருவது ஊழ். இஃது ஒரு தவிர்க்க முடியாத இயற்கை விதி; நியதி; அறத்தின் செயற்பாடு.

ஊழ் மற்றவரின் படைப்பும் அல்ல; கடவுளின் கொடையும் அல்ல. உலகியலின் ஒழுங்கு அமைதிகளுள் ஊழ் அமைவும் ஒன்று.

உலகியலில் இயற்கையில் வலிமையாக இருந்த புயல், பெரு மழை, வெள்ளம் முதலியவற்றை மனிதன் இன்று, வெற்றி பெற்று, ஆண்டு அனுபவிக்கிறான்.

இயற்கையோடு அவன் நிகழ்த்தும், நிகழ்த்திக் கொண்டிருக்கும் போராட்டத்தில் மனித குலம் வெற்றிகளையே பெற்று வருகிறது. ஒரோவழி, பெறும் தோல்விகள் கூட வெற்றியின் வாயில்களாக அமைந்தனவேயன்றி, முற்றான தோல்விகள் அல்ல.

அது போல ஊழியலின் ஒழுங்கமைவையும், மனிதன் வெற்றி காண முடியும் என்பது ஒரு கொள்கை.

ஊழியலின் ஒழுங்கமைவை வெற்றி பெறுதல் என்றால் ஒழுங்கமைவை எதிர்த்துப் போராடுவது அல்ல. ஊழின் ஒழுங்கமைவை எதிர்த்துப் போராடுவது என்றால், நியதிகளை எதிர்த்து அல்ல.

நியதிகளும் ஒழுங்கமைவுகளும் இல்லாது போனால் வாழ்க்கையில், ஓர் அமைவு இருக்காது; அமைதி இருக்காது;