பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 5.pdf/196

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

சிலம்பு நெறி

185



வானவர் மகளாக விளங்கிய ஊர்வசி, மாதவியாகப் பிறந்தாள், பேரழகியாக விளங்கினாள் என்பதில் வரலாற்றுச் சிறப்பு என்ன இருக்கிறது? மண்ணக மகளிர், வான மகளிரை வென்று விளங்கியவர் என்று கூறுதல்தான் மண்ணக மகளிர்க்குச் சிறப்பாகும்.

சமணசமயச் சார்பில் சிந்திப்பவர்கள் ஊழ்ச்சிறப்பை உணர்த்துவதற்காக எந்த ஒரு நிகழ்ச்சியையும் முற்பிறப்போடு கொண்டு இணைப்பது ஒரு மரபு. நம்மைப் பொருத்த வரையில் மாதவி மண்ணக மகள்தான்.

ஆனாலும் வானகமகளிரை வென்று விளங்கும் அழகு பெற்றுப் பொலிந்தாள். ஆடற்கலையில் சிறந்து விளங்கினாள். மாதவிக்குப் பிறப்பில் ஒரு குறையுமில்லை “பெருந்தோள் மடந்தை!” யாக விளங்கினாள்.

மாதவி, யாழ் மீட்டும் கலை கற்றுத் தேறினாள்; பாடற்கலை பயின்றாள்; ஏழாண்டுகள் ஆடலும் பாடலும் இடைவிடாது பயின்று தேர்ச்சி பெற்றாள். மாதவி அரங்கேற்றத்துக் குரியவளாகி விட்டாள்.

சோழப் பேரரசின் அரங்கில் மாதவி தனது ஆடற் கலையை அரங்கேற்றம் செய்தாள். சோழப் பேரரசன் மாதவியின் ஆடற்கலைத் திறமும் நுட்பமும் கண்டு மகிழ்வெய்தி ‘தலைக்கோல்’ தந்து சிறப்பித்தான். மாதவி சோழ நாட்டின் ஆடற்கலையரசியானாள். கலை உலகத் தெய்வமானாள்.

மாதவி தலைக்கோலியானாள். தலைக்கோல் சிறப்புப் பெற்ற மாதவி ஆயிரத்தெண் கழங்சு பசும்பொன் ஒரு நாள் பரிசாகப் பெற்றாள். மாதவி, பிறப்பிற் குன்றாப் பெருந் திருவினளாயினும் சார்பு யாரை விட்டது?

மாதவியை - கலைக்குரிய தெய்வத்தை நாட்டு மரபிற்கேற்ப ஒருவனுக்கு உரிமையாக்க அவள் சுற்றம்