பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 6.pdf/297

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

பாரதியின் தேசியப் பாடல்கள்

285



பாரதியின் கவிதை காலத்திற்கேற்ற புதுப்புதுக் கருத்துக்களை மாறி மாறித் தந்து கொண்டிருக்குமே தவிர அழியாது. அன்று சிந்து நதியின்மிசை படகு விடுமாறு பாடிய பாரதி வாழ்வானானால் பாரத நாடனைத்தையும் ஒன்றாக அன்று கண்டதுபோல் உலக நாடுகள் அனைத்தையும் ஒன்றாகக் கண்டு "அமேசான் நதியின் மிசை நிலவினிலே படகு விடுவோம்” என்று பாடுவான். அன்று தன்னாட்டின் எல்லைப்போக்கில் அவனுக்கு சிந்துதான் கிடைத்தது. இன்று சிந்துவில் இல்லாவிட்டாலும் கங்கையிலாவது படகோட்ட எந்தத் தமிழனாவது முன்வந்துள்ளானா? இவையெல்லாம் செய்ய முன்வராத தமிழன், பாரதி கூறியபடி ஒன்றே ஒன்றினை மட்டும் முயல்கிறான்-முன் வருகிறான். சேரநாட்டுப் பெண்களை மணக்க மட்டும் முன்வருவான். தன் ஊர் விட்டு-தன் மாமனார் ஊர்விட்டு வேற்று ஊர்களுக்குச் சென்று வேலை செய்யப் பயப்படும் தமிழன் படகோட்டுவது எங்கே?

ஆகவே காரல்மார்க்க்ஸ், தோன்றியன அப்படியே நிலைத்திருக்க மாட்டா வளர்ச்சிக்குரியன வளரும் என்ப தைத்தான் குறிப்பிடுகின்றார்.

தேசியம் என்பது நாட்டை நேசிப்பது மட்டும்தான் என்று சொல்கிறார்கள்.

தன்னாட்டை நேசிப்பது மட்டும் அன்று. மனிதனுடைய உணர்வு-சிந்தனை-செயல்வாழ்க்கை-வீடு-அரசு - ஆட்சி அனைத்துமே தேசியம் என்று சிலர் விளக்கம் தருகின்றனர்.

அழகான விளக்கம் அது. ஆங்கிலேயனை-அந்நியனை எதிர்ப்பது-தன்னாட்டை நேசிப்பது மட்டும் தேசியமல்ல, நாட்டினுள் அமைந்த வீடும் வாழ்க்கையும், மனிதனும் அவன் கருத்தும், சிந்தனையும் அவனையாளும் அரசும் ஆட்சியும் செம்மையுடன் சிறக்க வேண்டும் என்று உழைப்பதுதான்.