பாரதி ஒரு யுகசந்தி
29
- மெய்க்குங் கிருத யுகத்தினையே
- கொணர்வேன், தெய்வ விதிஇஃதே!
- மெய்க்குங் கிருத யுகத்தினையே
(விநாயகர் நான்மணிமாலை-39)
என்று பாடுகின்றான்!
மானிட சாதியின் வரலாறு உயிர்ப்புள்ளது. உயிர்ப் புள்ள அனைத்தும் மாற்றங்களைப் பெறும். மாற்றங்களே உயிரின் இயற்கை, மாற்றங்களே மனித உலகத்தின் வரலாறு. மாற்றங்களை விரும்பாதவர்கள் பகலை விரும்பாது இருளை விரும்பி நச்சி வாழும் கூகையைப் போன்றவர்கள். கூகையைப் போன்றவர்கள் இருளை ஆவாகித்துக் கொண்டு குரல் கொடுக்கலாம்; கூச்சல் போடலாம்; ஆரவாரம் செய்யலாம். ஆனாலும் கூகை, கூகைதான்! மானுடம் வெற்றி பெறும். இதுவே பாரதியின் நம்பிக்கை.
"பழைய பயித்தியம் படீரென்று தெளியுது” என்பான் பாரதி, அறிவின் தெளிவும், ஆற்றலின் உறுதியும், ஆள்வினைத் திறனும், வளமும் ஒளியும் இல்லாத கலியுகத்தைப் "போ: போ' என்று விரட்டுகின்றான். புதிய ஒளிபடைத்த பாரதத்தைக் கிருதயுகத்தின் பொலிவு பெறும் பாரதத்தை வரவேற்கின்றான்! பாரதி. பழைமையை வேரொடும், வேரடி மண்ணொடும் கல்லி வெந்நீர் விட்டவனல்ல. இத்தகு மருத்துவச் செயல்முறை பாரதிக்கு உடன்பாடன்று. பாரதி, இன்றைய புதிய மருத்துவ இயலைப் போன்றவன். அதாவது நச்சுத் தன்மையடைந்த உடலின் குருதியை அறவே வெளியே எடுத்துவிட்டுப் புதிய குருதியைப் பாய்ச்சி மனிதனை நடமாட வைக்கும் வியத்தகு சாதனை, மருத்துவ உலகத்தில் வந்திருக்கிறது. பாரதி, இத்தகைய மருத்துவன். பாரதி, பாரத தேசத்தின் உருவத்தைச் சிதைக்கவில்லை. ஆனால், மட்கிப்போன பழைய உணர்வுகளை மாற்றிப் புதிய உணர்வுகளைப் பாய்ச்சுகின்றான். பாரதி, திருக்கோயில்களை இடிக்கவில்லை மாறாக, ஆங்குள்ள தேவி சிலைகளைச்