பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 6.pdf/83

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

பாரதி ஒரு யுகசந்தி

71



பாரதி, இந்திய நாட்டின் கடந்தகால வரலாற்றைக் கூர்ந்து படித்திருக்கிறான். இந்திய வரலாற்றில் சாதிகள்,இனங்கள், பதவிகள் இவைகள் காரணமாகச் சமூகத்தில் ஏற்பட்ட மதிப்புகளையும் அவமதிப்புகளையும் கணக்கில் எடுத்துக் கொண்டு எல்லாரையும் சமநிலையில் மதிக்கும் உணர்ச்சியின்மையை நினைந்து வருந்தியுள்ளான். சொல்லப்படும் செய்திக்கு மரியாதையன்று. சொல்லுபவரை நோக்கியே மரியாதை இருந்தது. சாதாரணச் சமூகத்தில் பிறந்த ஒருவர் எவ்வளவு அருமையான செய்திகளைச் சொன்னாலும் அதற்கு வரவேற்பில்லை. ஆனால் சாதியிலோ பணத்திலோ பதவியிலோ உயர்ந்த மேட்டுக் குடியிலிருப்போர் 'தத்துப்பித்து' என்று உளறினாலும் அபாரஞானம் என்று பாராட்டப் பெற்றது. சராசரி ஒரு மனிதரை அவர் ஒரு மனிதர் என்ற அளவில் மதிக்காமல் சூழ்நிலைகளுக்கு ஏற்ப மரியாதை-மதிப்பு என்ற அவலநிலை பாரதி காலத்தது. நந்தனாரின் திருக்கோயில் வழிபாட்டார்வம் கூட எளிதில் ஏற்றுக் கொள்ளப் பெறவில்லை. நிலப்பிரபுத்துவத்தின் நச்சுச்சேயான தீண்டாமைக் கொடுமையில் நந்தனாரின் சமய ஆர்வம் கூடக் கருகிப் போயிற்று. ஆதலால் மதிப்பு ஆள் நோக்கியன்று; அறம் நோக்கியே. இது பாரதியின் கோட்பாடு. எல்லாரும் சமநிலையில் வைத்து மதிக்கப் பட்டால்தான் மனிதரிடத்தில் தாழ்வுணர்ச்சி தலைகாட்டாது. ஒரு சிலரிடத்தில் உயர்வுணர்ச்சியென்ற அகத்தையும் தலைகாட்டாது. ஆள்வோராயிருந்தால் என்ன ? ஆளப்படுவோராயிருந்தால்தான் என்ன? தரத்திற்கும் தகுதிக்கும்தான் மரியாதையே தவிர நாற்காலிகளுக்கல்லவே! இந்த மனப்பான்மை சமுதாயத்தில் வளர்ந்தால்தான். சிந்தனை வளரும், அச்சமின்றிச் சிந்தனை வெளிப்படுத்தப் பெறும். கருத்துக்கள் வளரும்; பயமின்றிக் கருத்துக்கள் சொல்லப்பெறும். ஆதலால் பாரதி இந்திய மக்கள் எல்லோரையும் ஒரு நிறையாக்குகின்றான்.