20
தவத்திரு குன்றக்குடி அடிகளார்
அப்போது தொடங்கித் திருவாதவூரர் மாணிக்கவாசகர் ஆனார்.
இறைவன், மாணிக்கவாசகரைக் கொண்டு மண்ணில் பல பணிகள் செய்திட எண்ணியதால் மாணிக்கவாசகரை மண்மேல் இருத்தி உடன் இருந்த மற்ற அடியார்களுடன் மறைந்து விட்டார். இந்தப் பிரிவினால் வருந்தி மாணிக்கவாசகர் பாடிய பாடல்கள் கல் நெஞ்சினையும் உருக்கும் தன்மையன.
மாணிக்கவாசகர், திருப்பெருந்துறையில் குருந்த மரத்தடியில் ஒரு பேரொளியைக் காண்கின்றார்; அணுகுகின்றார். இல்லை, அந்தப் பேரொளி அவரை ஈர்க்கிறது. அதனையடைந்து அண்ணித்து நிற்கிறார்; அப்போது சுடரைக் காண்கிறார். மிகவும் நெருக்கமாக அண்ணித் துள்ளமையால் “கூழ் ஒளிவிளக்கை”க் காண்கிறார்.
உலக இருள் நீக்க, சோதி, வாழும் இடத்தில் இருள் நீக்கச் சுடர். அகத்திருள் நீக்க விளக்கு! இப்படி ஒரு திருக்காட்சி தெரிகிறது. அக்காட்சியை “சோதியே! சுடரே! சூழொளி விளக்கே!” என்று பாடுகிறார் மாணிக்கவாசகர்.
“திருப்பெருந் துறையில் நிறை மலர்க் குருந்தம்
மேவிய சீர் ஆதியே!”
என்று தொடர்கிறது மணிமொழி.
எல்லாம் அவன் செயல்
திருப்பெருந்துறை ஈசனின் பிரிவு தாங்காது மாணிக்கவாசகர் பாடிய பாடல்கள் ஊனினையும் உயிரினையும் உருக்கும் பாடல்கள். மாணிக்கவாசகர் தம்மை இறைவன் ஆட்கொண்டருளியதையும் ஐந்தெழுத்தோத எடுத்துத் தந்தருளியதையும் நினைந்து நினைந்துருகிப் பாடுகிறார்.