பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 8.pdf/33

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

மாணிக்கவாசகர்

21



“நானேயோ தவம் செய்தேன்; சிவாய நம எனப்பெற்றேன்!” என்பது மாணிக்கவாசகரின் வாக்கு. “என்னை ஓர் வார்த்தை யுட்படுத்துப் பற்றினாய்” என்பதும் அவர் வாக்கு. “ஓர் வார்த்தை” ஐந்தெழுத்து. மாணிக்கவாசகர் பத்திமையில் முறுகி வளர்ந்தார்.

குதிரை வாங்க கொண்டுவந்த பொருளைக் கொண்டு திருப்பெருந்துறைத் திருக்கோயில் திருப்பணி செய்தார். அரசனிடமிருந்து தூதுவர் வந்தனர். திருப்பெருந்துறை இறைவனிடம் மாணிக்கவாசகர் வேண்டுகிறார். அரசனுக்கு என்ன விடை சொல்ல என்று! ஏன்?

திருப்பெருந்துறையில் ஆட்கொள்ளப்பெற்ற நிலையில் மாணிக்கவாசகர் திருப்பெருந்துறைச் சிவபெருமானின் உடைமையானார். இதனை,

“அன்றே என்றன் ஆவியும்
உடலும் உடைமை எல்லாமும்
குன்றே அனையாய் என்னை ஆட்
கொண்ட போதே கொண்டிலையோ!
இன்றோர் இடையூ றெனக் குண்டோ
எண்தோள் முக்கண் எம்மானே!
நன்றே செய்வாய்! பிழை செய்வாய்
நானோ இதற்கு நாயகமே!

(குழைத்த பத்து–7)

என்ற திருவாசகத்தால் அறியலாம்.

உடல், உயிர், உடைமை மூன்றையும் தியாகம் செய்தால்தான் ஞானம் சித்திக்கும். ஆன்மா, ஒரே நேரத்தில் இரண்டு எஜமானர்களுக்குச் சேவகம் செய்ய முடியாதல்லவா? இங்கு தியாகம் செய்தல் என்பது உடல், உயிர், உடைமை இவற்றுக்கு முதன்மை கொடுக்காது இலட்சியத்திற்காக வாழ்தலைக் குறிக்கும்.