பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 9.pdf/230

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

218

தவத்திரு குன்றக்குடி அடிகளார்


பெற்றிருக்க வேண்டும். ஆனால், இன்றோ யாருக்கு முதலில் திருநீறு என்ற சண்டை வலுத்து இருக்கிறது.

இறைவனின் கண்டத்தை நினைவூட்டுவது கண்டிகை. ஆம்! இறைவன் நீலகண்டன், விண்ணோர்கள் வாழ அமுதத்தை வழங்கி விட்டு நஞ்சை உண்டு நிறுத்திய கண்டமல்லவா? கண்டிகை அணிந்தவர்கள் பிறர்க்கு இன்பத்தை வழங்க வேண்டும். தாம் துன்பத்தை ஏற்றுக் கொள்ள வேண்டும். அப்பொழுதுதான்் கண்டிகைக்குப் பெருமை. கண்டிகை அணிந்தோரின் சீலம் ஏற்றுப் போற்றப் பெறும் இன்றோ கண்டிகையின் தத்துவத்திற்கும், கண்டிகை அணிந்திருப்போரின் வாழ்க்கைக்கும் ஒட்டும் இல்லை; உறவுமில்லை. இன்று கண்டிகை பெற்றிருக்கும் ஏற்ற மெல்லாம் அதற்குத் தங்கவளை பிடிக்கப்பட்டிருப்பதுதான்். ஆம்! இதில் ஒரு நடைமுறை உண்மை புலப்படுகிறது. கருணையைத் தங்கம் கொள்ளை கொண்டு விட்டது என்பதே உண்மை. இறைவனைத் தொழுதல் ஓர் இன்பம். தொழுதலில்பெறும் இன்பத்திற்கு இணையான இன்பம் விண்ணிலும் இல்லை. மண்ணிலும் இல்லை. இன்று கூடும் அன்பினில் கும்பிடும் இயல்புமாறி, வணிகநோக்கில் கும்பிடும் கும்பிடுகள் அதிகமாகிவிட்டன. வணிகக் கும்பிடுகள் வஞ்சனைக் கும்பிடுகள்தான்். வணிகக் கும்பிடு வந்தவுடன் அடக்கம் போய் ஆணவம் தலையெடுத் திருக்கிறது. அதனால், தேவதேவன் முன்னாலேயே இந்தத் தெருக்கோடி மனிதன் பெயர் சொல்லப்படுகிறது. ஆம் அவன் அறியாத வனல்லவா? உடன் ஒரு தேவைப் பட்டியலும் அறிவிக்கப் படுகிறது. இந்த வணிகமுறை கும்பிடுதலில் கலந்திருக்கும் வரை இறைவனும் தலைப் படான். மண்ணுலகும் செழிக்கப்போவதில்லை. கூடும் அன்பினில் கும்பிடுதலே கும்பிடு. சேக்கிழார் படைத்துக் காட்டிய திருக்கூட்டம் மீண்டும் தமிழகத்தில் தழைக்க வேண்டும். அன்றே தமிழகத்திற்குப் பொன்னாள்.