42
குமண வள்ளல்
தங்களுக்கே போதிய உணவு கிடைக்காதபோது விருந்தினர்களை அழைப்பது எப்படி? அப்போது அவளுக்கு உண்டான விருப்பத்தை இப்போது அவள் நிறைவேற்றிக்கொண்டாள். இவ்வாறு அவர் வீட்டில் அழைப்பின் மேல் வந்த விருந்தினர்களும், அழையா விருந்தினர்களும் வந்து நிரம்பினார்கள். வீடு கல்யாண வீடு போலப் பொலிவுடன் விளங்கியது.
ஏழை யென்றால் அயல் வீட்டுக்காரர் கூட ஏனென்று கேட்காத உலகம் இது. பணக்காரன் என்றால் வலியச் சென்று நட்பாடுவார்கள் மக்கள். வறுமை மலிந்திருந்த பழங்காலத்தில் எட்டிக்கூடப் பாராத ஊர்க்காரர்கள் இப்போது தாமே வந்து வந்து பழகினார்கள். பெருஞ்சித்திரனார் குமணனைக் கண்டு பரிசில் பெற்ற வரலாற்றைச் சொல்லச் செய்து கேட்டுப் பாராட்டினார்கள். ஊர்ப் பெண்கள் அவருடைய மனைவியுடன் பழகத் தொடங்கினார்கள்.
‘என்ன விசித்திரமான உலகம்!’ என்று புலவர் தமக்குள்ளே எண்ணி வியந்தார்.
எப்படியோ ஊரவர் பழக்கம் உண்டானது நல்லதாகப் போயிற்று. புலவர், அவர் மனைவியார் இருவருடைய நல்லியல்புகளையும் மற்றவர்கள் உணர்ந்து கொண்டார்கள். ஊரவரிலும் நல்லவர்கள் இருப்பார்கள் அல்லவா? அவர்கள் நெருங்கிப் பழகினார்கள்.
‘குந்தித் தின்றால் குன்றும் மாளும்’ என்று சொல்வார்கள். குமணன் கொடுத்தனுப்பிய பொருள்கள் சில மாதங்களுக்கு வந்தன. வர வர அவை குறைந்தன.
அயலில் உள்ளவர்கள் வேண்டிய பண்டங்களைக் கொடுத்தார்கள்; புலவர் மனைவியிடம், “இவற்றை நீ