வெளிமானும் இளவெளிமானும்
59
போலத் துள்ளிக் குதித்துக் கொண்டுவா, போவோம். இப்படி யெல்லாம் நடக்கிறதே என்று வருந்த வேண்டாம். தம்முடைய நிலை கண்டு சிறிதேனும் வருத்தமடையாதவன் முன் நின்று தம் மெலிவைக் காட்டிக் கொண்டு ஏங்கி நிற்பவர்களும் மனிதர்களா? தானே கனியாத பழத்தைத் தடிகொண்டா கனிய வைப்பார்கள்? அன்பில்லாதவர்களைச் சார்ந்து மனம் கலங்குபவர்களும் புலவர்களா ? நமக்கு அவர்களைப்பற்றிக் கவலை இல்லை. வா, போவோம்.”[1]
இப்படிச் சொல்லிவிட்டுத் திரும்பிக்கூடப் பாராமற் புறப்பட்டுவிட்டார் புலவர். இளவெளிமான் அவர் செய்கை கண்டு திகைப்படைந்தான். ‘இரவலனுக்கு வந்த இறுமாப்பைப் பார்!’ என்று நினைத்தாலும், பெருஞ்சித்திரனாருடைய பேச்சும், அதில் இருந்த வீரமும் அவனுக்கு அச்சத்தை உண்டாக்கின. முகத்தைத் தொங்கப் போட்டுக்கொண்டு உட்கார்ந்திருந்தான்.
- “பெரிதே உலகம், பேணுநர் பலரே”[2]
என்று அவர் சொன்ன வார்த்தை அவன் காதில் இன்னும் ஒலித்துக்கொண்டே இருந்தது.
பெருஞ்சித்திரனார் தம் சினத்தைக் காட்டிவிட்டுப் புறப்பட்டுப் போனார். அவருக்குப் பல விதமான எண்ணங்கள் தோன்றின. ‘வேம்பும் மாவும் ஓர் இடத்திலே வளர்வதுபோல வெளிமானைப் பெற்ற வயிற்றிலே இவனும் தோன்றியிருக்கிறான். செல்வத்தைப் படைத்துப் பாதுகாத்து வாழ்வதுதான் வாழ்வு என்று இவன் நினைத்திருக்கிறான் போலும் புலவர்களுடைய