இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
17
இனப்பெருக்கச் சுரப்பிகள் சரியானபடி வேலை செய்யாவிடில் மலர்ச்சி யெய்தும் காலம் தாமதப்படும்; இனப்பெருக்க உறுப்புக்களும் இயல்பானபடி வளர்ச்சியடையா. பையன்கள் பெண்மைக்குரிய தோற்றமும் நடத்தையும் ஓரளவு கொண்டவராக இருப்பார்கள்; பெண்கள் ஆண்மைக்குரிய தோற்றமும் நடத்தையும் ஓரளவு கொண்டவராக இருப்பார்கள்.
பிட்டூட்டரியின் தூண்டுதலால் இனப்பெருக்கச் சுரப்பிகள் அளவுக்கு மீறி அதிவேகமாக வேலை செய்யத் தொடங்கினால் மிக விரைவில் மலர்ச்சி யெய்திவிடுவார்கள். இனப்பெருக்க உறுப்புக்களும் விரைவில் முதிர்ச்சி பெற்றுவிடுகின்றன. சாதாரணமாகப் பிட்டூட்டரி இனப்பெருக்கச் சுரப்பிகளைத் தூண்டும் வயதைவிட முன்பே தூண்டத் தொடங்குவதால் இம்மாதிரி ஏற்பட்டுவிடுகிறது. இதுவும் விரும்பத்தக்கதல்ல.
மலர்ச்சி யெய்துகின்ற காலத்திலே இனப்பெருக்கத்திற்கு வேண்டிய தகுதி ஏற்படுகின்றதென்று கண்டோம். உடலுறுப்புக்களிலும் இனப்பெருக்கத்திற்கு உதவும் உறுப்புக்களிலும் வேகமான வளர்ச்சி ஏற்படுகின்றது. மலர்ச்சி யெய்திய ஆண் சில சமயங்களிலே உறக்கநிலையிலே விந்து தானகவே வெளிப்படுவதை அறிகிறான்.இதற்கு இரவு ஸ்கலிதம் என்று பெயர். சிலருக்கு இது அடிக்கடி நிகழ்கின்றது. சிலருக்கு எப்பொழுதாவது நிகழும். இவ்வாறு நிகழாமலேயே வளர்பவர்களும் உண்டு.