பக்கம்:குமரியின் மூக்குத்தி.pdf/105

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

ஜடை பில்லை

99

எத்தனை தரம் நான் கம்பெனி என்று சொல்லித் தந்தாலும் அவள் கடை என்றுதான் சொல்கிறாள். அது புத்தகக் கடைதானே? -

"இருந்திருந்து இந்த வயசில் என்ன அப்படி இங்கிதமான பேச்சு?” என்று புன்னகை பூத்தபடியே கேட்டேன்.

"போங்கள், அம்மா! என் மகள் மீனாட்சியின் கல்யாணத்தைப்பற்றிப் பேசினார். யாரோ தூரத்து உறவில் சேலம் ஜில்லாவில் சேந்தமங்கலம் என்ற ஊரில் ஒரு பையன் இருக்கிறானாம். அவன் தொழிலில் கெட்டிக்காரனாம். இப்போதுதான் இவருக்குத் தொழிலில் மதிப்பு வந்திருக்கிறதே. அவன் பெரிய குடும்பத்தைச் சேர்ந்தவனாம். அவனுக்கே மீனாட்சியைக் கல்யாணம் பண்ணிக் கொடுத்துவிடலாம் என்று சொன்னர்.”

"ஓஹோ கல்யாணம் கூடுகிறது. நல்லது; சுவாமி நல்லபடியாகக் கல்யாணம் நடத்தவேண்டும்” என்றேன். 'இதென்ன, பெட்டியைத் திறந்து போட்டுக்கொண்டு உட்கார்ந்திருக்கிறீர்களே!” என்று சொக்கநாயகி கேட்டாள். -

"நீ வரவில்லை. இதில் எதையோ தேடுவதற்காக எடுத்து வைத்துக்கொண்டேன்; என்ன என்னவோ ஞாபகம்!”

"எதைத் தேடினீர்கள்?"

பழைய கதையை அவளுக்குச் சொல்ல நாக்கு எழுந்தது. ஆனால் அடக்கிக்கொண்டேன். அவள் கல்யாணச் செய்தியைச் சுபமாக வந்து சொல்கிறாள்; இந்தச் சமயத்தில் நாம் நம் அழுகையைச் சொல்வதாவது! .

ஆனாலும் அந்த ஜடை பில்லையை எடுத்து அவளுக்குக் காட்டினேன். அதை அவள் கையில் வாங்கிப் பார்த்தாள். நான் பெட்டியை மூடி உள்ளே வைத்துவிட்டு வந்தேன்.

ரொம்ப ரொம்ப நன்றாக இருக்கிறதே! என்றாள் அவள்.