பக்கம்:குயிலும் சஞ்சீவி பர்வதத்தின் சாரலும்.pdf/6

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

iv

நாட்டுணர்வும் மொழியுணர்வும் கொண்ட இளைஞர்களுக்கெல்லாம் எடுத்துக் காட்டாகவும், வழிகாட்டியாகவும், ஞான குருவாகவும் விளங்குகிறார் பாரதியார்.

வயது ஏறஏற, படிக்கும் வகுப்புகளின் எண்கள் கூடக்கூட இலக்கிய உணர்வுகள் கூடிவந்தன.

பாரதியாரின் தேசீயப் பாடல்களிலே வசமாகி நின்ற நெஞ்சு பிடி கழன்று இலக்கியப் பாடல்களுக்குத் தாவியது.

பாஞ்சாலி சபதம், பாரதி அறுபத்தாறு, கண்ணன் பாட்டு போன்ற இலக்கியப் பாடல்கள் புதுச்சுவை தருவனவாக விளங்கின.

எங்கள் தமிழாசிரியர் பாரதியாரின் பாடல்களிலேயே மிகச் சிறந்தவை கண்ணன் பாட்டும், குயிலும் தான் என்று அழுத்தமாகக் கூறினார். அவர் கூறிய பிறகு, சற்று ஆவலோடு அப்பாடல்களைப் படிக்கத் தொடங்கினேன். படிக்கும்போதே ஒரு புதிய உலகுக்குள்–இன்பமயமான ஒரு விந்தை யுலகுக்குள் புகுந்த உணர்வு தோன்றியது. அத்தனை நேர்த்தியாகப் படைத்திருந்தார் பாரதியார்.

இளமைப் பருவமும், இலக்கிய ஆர்வமும், தமிழ்க் காதலும் ஒன்று சேர்ந்து-பாரதியின் இலக்கியப் படைப்பில் இன்பங் காணும் உணர்வைத் தோற்றுவித்தன என்றால் தவறில்லை.

குயில் பாட்டு படிக்கப் படிக்கச் சுவை கூட்டும் சிறு காவியமாக விளங்கியது. மீண்டும் மீண்டும் படிக்கத் தூண்டுவதாக அமைந்திருந்தது. ஒவ்வொரு முறை படிக்கும் போதும் புதுப்பொருள் புதுநயம் பொலிந்து விளங்கியது. அத்தனை மேன்மையாகப் படைத்திருந்தார் பாரதியார்.

பாரதியாரின் பாடல்களில் ஈடுபட்டுப் பழகிய நெஞ்சுக்குப் புதிதாகப் பாரதிதாசன் அறிமுகமானார். குடும்ப விளக்கின்