34. காரணம் என்ன?
இந்த உலகில் செல்வந்தர்கள் மிகச் சிலரே உள்ளனர்; வறியவர்கள் பலர். இந்த அவல நிலை ஏன்? உலகு தொடங்கிய நாள் தொட்டு, எல்லாரும் செல்வந்தர்களாக விளங்கவே விரும்புகின்றனர்; முயலுகின்றனர். சிலருக்கே வெற்றி கிடைக்கிறது. பலர் தோல்வியடைகின்றனர்.
இந்த வெற்றி — தோல்வியின் விளைவாக ஏற்பட்டுள்ள விளைவுகள் மனித சமுதாயத்தின் நல்வாழ்க்கைக்குக் கேடு பயப்பன ஆகும். பல்வேறு ஒழுக்கத் தவறுகளைத் தோற்றுவிப்பனவாகவும் அமைந்துள்ளன. அதனாலேயே, செல்வம் உடைய சிலரை எதிர்த்து, கிளர்ச்சிகளும், புரட்சிகளும் தோன்றின — தோன்றுகின்றன.
இந்த அவல நிலை பற்றிய ஆய்வு, இரண்டாயிரம் ஆண்டுகட்கு முன்பே திருக்குறளில் செய்யப் பெற்றுள்ளது. திருவள்ளுவர் ஒரு முற்போக்குக் கருத்துடைய கவிஞர் — பொருளியல் வல்லுநர் —நடைமுறைக்கு இயைந்த சித்தாந்தங்களைக் கண்டு சமூகச் சிக்கல்களுக்குத் தீர்வு கண்டவர்.
செல்வம் உடையவராகச் சிலரும், இல்லாதவராகப் பலரும் இருப்பதற்கு, திருவள்ளுவர் காரணம் கூறுகிறார். அவர் கூறும் காரணம் புதிது — புகழுடையது. உலக அரங்கில் தோன்றிய முற்போக்குக் கருத்துக்கள் அனைத்தினும் ஆன்ற சிறப்புடையது.