98 ஒ புலவர் கா. கோவிந்தன்
அகன்று விட்டான். பிறிதொருநாள், காவலர் கண்ணிலும் படாது, ஊர் நாய்கள் உணர்தலினின்றும் தப்பி, அப் பெண்ணின் வீட்டிற்கருகே வந்து சேர்ந்தான்். ஆனால், ஆங்கு, அவள் தாய் உறங்காது விழித்துக் கொண்டி ருந்தமையால், அப்பெண் வெளிவந்திலள். அதனால், கருதி வந்த காரியம் அன்றும் கைகூடப் பெறாமையால் கலங்கி மீண்டான். வேறொருநாள், காவலர் கண்ணிற்கும் அகப்படாமல், நாய்களின் தொல்லையையும் கடந்து வந்துவிட்டான். அப்பெண்ணின் தாயும் உறங்கிவிட்டாள். ஆனால், அந்நிலையில், வெண்திங்கள் வெளிப்போந்து, பேரொளி பரப்பத் தொடங்கி விட்டது. அதனால் கள வொழுக்கத்திற்குத் தகுதியுடையதன்று அக்காலம் எனக் கருதி, ஊர் திரும்பிவிட்டான். ஒருநாள், அவன் வருகைக்கு எவ்விதத் தடையும் உண்டாகவில்லை. அவ்வாறு வந்து சேர்ந்த அவன், அப் பெண்ணிற்குத் தன் வருகையை அறிவிக்கும் குறியாக, முன்னரே அறிவித்திருந்தவாறு, நொச்சி மலரைப் பறித்து எறிந்து சிறு ஒலி எழுப்பினான். ஆனால், அவன் வருவதற்கு முன்னர், நொச்சி மலர் ஒன்று, எவ்வாறோ காம்பற்று விழ, அதனால் எழுந்த ஒலியை, அவன் வருகை அறிவிக்கும் குறியாகக் கருதி, அப்பெண் ஆங்கு வந்து, அவனைக் காணாது கலங்கி, வறிதே மீண்டவளாதலின், இம்முறை அவனே வந்து ஒலி எழுப்பிக் குறி செய்தான்ாகவும், அதையும், முன்னதைப் போன்றதாகவே கொண்டு வாராதே நின்றுவிட்டாள். அதனால், அன்றும் அவளைக் காணாது மீண்டான்.
இவ்வாறு, பலநாள் வந்து வந்து, அவளைக் காண மாட்டாது, வறிதே மீண்டு, இளைஞன் ஒருபால் வருந்த, அப் பெண்ணும் அவன் வருகையை எதிர்நோக்கி,