குறிஞ்சிக் குமரி இ. 211
முன்னின்று துணிந்து கூறும் இயல்புடையாள். ஓர் ஆடவன் முன் பெண்ணொருத்தி நின்று பேச்சுக் கொடுப்பது நாணுடைய பெண்ணிற்கு நன்றன்று என எண்ணாது அவள் புதுமையுள்ளம். தவறு எனத் தன் உள்ளம் உணர்ந்ததைத் தன் தோழிபாற் கூறி, அவளைக் கொண்டு, அத்தவறு புரிந்தார்க்கு உணர்த்தல் வேண்டும். இதுவே, பெண்ணொருத்தி நடந்து கொள்ளும் முறையாம் என எண்ணினாள் அவள். அவ்வாறு சுற்றி வளைத்துச் செல்வதற்குள், தவறு நிகழ்ந்துவிடுமே எனும் அச்சத்தால், தவறு கண்டவுடனே, அது நிகழ்ந்த அப்போதே துணிந்து கூறிவிடுவாள் அவள். மேலும் தவறு செய்தாரையே தண்டித்தல் வேண்டும் என அவள் உள்ளம் எண்ணாது. ஒருவர் செய்த செயல் நன்றே ஆயினும், அதைச் செய்யும் முறை அறிந்து செய்தல் வேண்டும். மாறாக அவரைக் கலவாது செய்யினும், முறை பிறழச் செய்யினும் அது குற்றமாம். அவரும் தண்டித்தற்கு உரியரே எனக் கருதும் உள்ளம் உடையாள் அவள்.
இவ்வாறு புதுமை நெறி நிற்கும் அவ்விளைஞன், தன்னைப் போன்றே, புதுமை விரும்பும் அப்பெண்ணைக் காதலித்தான்். மாசற்ற மதிபோல் விளங்கும் அவள் முக அழகு, அவனை அடிமையாக்கி விட்டது. மெய், வாய், கண், மூக்கு, காது எனும் ஐம்பொறிக்கும் ஒருங்கே இன்பம் அளிக்க வல்லாள் அவள் என அறிந்து, அவ்வைம்புல இன்பங்களையும் ஆரத்துய்க்கத் துடித்தது அவன் உள்ளம், அவ்வாறு துடித்துக் கொண்டிருந்தான்். ஒருநாள் அவள் ஓரிடத்தே தனித்திருக்கக் கண்டான். கண்டதும், அவள் பால் அவன் கொண்டிருந்த காதல் கரை புரண்டு