பக்கம்:குழந்தைகள் கலைக்களஞ்சியம் 9.pdf/18

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

வண்ணத்துப் பூச்சி புறத்திலுள்ள மெல்லிய சிறகுகளை விரித்து வண்டு பறக்கிறது. பறக்காதபோது, உட்புறச் சிறகுகளை - வண்டு மடித்துக்கொள்கிறது; வெளிப்புறச் சிறகுகள் ஓர் உறைபோல இவற்றை மூடிக்கொள்ளும். இதனால் வண்டுகளுக்கு 'உறைச் சிறகிகள்' என்றும் பெயருண்டு.

பூச்சிகளைப்போலவே வண்டுகளுக்கும் தலையில் இரண்டு உணர் கொம்புகள் உள்ளன. கண்கள் கூட்டுக் கண்களாகும். இரையைக் கடித்துத் தின்பதற்கேற்றபடி வண்டின் வாயுறுப்புகள் அமைந்துள்ளன. இவற்றுக்குத் தாடைகள் உண்டு. கால்கள் ஆறு உள்ளன.

நிலத்திலோ, இலை, மரம் ஆகியவற்றின் மீதோ வண்டு முட்டையிடும். பூச்சிகளைப் போன்றே வண்டுகளின் வாழ்க்கையிலும் நான்கு நிலைகள் உண்டு; முட்டையிலிருந்து லார்வாவும், அதிலிருந்து கூட்டுப்புழுவும், இறுதியில் முதிர்நிலை வண்டும் உண்டாகும். சில வண்டுகளின் நிறம் அவை வாழும் சூழ்நிலையை ஒத்திருக்கிறது. இதனால் அவ்வண்டுகளை எளிதில் கண்டுகொள்ள முடியாது.

வண்டுகளால் பெரும்பாலும் தீமையே விளைகிறது. நிலத்தில் விளைந்துள்ள பயிர்களையும் மரங்களின் வேர், தண்டு, கிளை, கனி முதலியவற்றையும் வண்டுகள் துளைத்து அழித்துவிடுகின்றன. வீடுகளில் சேமித்துவைத்திருக்கும் தானியங்களிலும், ரவை, மா போன்ற உணவுப் பொருள்களிலும் இவை முட்டையிட்டுப் பெருகிச்சேதம் விளைவிக்கின்றன. சில வண்டுகளால் நன்மையும் உண்டு. மக்களுக்குத் தீமை செய்யும் சிறு பூச்சிகளை அழித்து அவை பரவாதபடி தடுக்க இவை உதவுகின்றன.


வண்ணத்துப் பூச்சி ( Butterfly ) : பல வண்ணச் சிறகுகளையுடைய வண்ணத்துப்பூச்சி அங்குமிங்கும் பறந்து, மலர்கள் மீது அமர்ந்து செல்வதை நாம் பார்த்திருக்கிறோம். இது பூச்சி இனத்தைச் சேர்ந்தது. பல அழகான வண்ணங்களை உடைய பூச்சியாதலால் இதற்கு வண்ணத்துப்பூச்சி என்று பெயர். இவ்வகை நிறங்களை இறகுகளுக்குத் தருவது ஒருவிதச் செதிலாகும்.நாம் அதன் இறகைத் தொட்டுப் பார்த்தால் 'மினு மினு' வென்று ஒரு பொடி நம் விரல்களில் ஒட்டிக்கொள்ளும். அந்தப் பொடிதான் செதில்.

வண்ணத்துப்பூச்சியின் உடல் சிறியதாக இருக்கும். இது தலை, மார்பு, வயிறு என மூன்று பகுதிகளை உடையது. தலையில் இரண்டு நீண்ட உணர் இழைகள் உண்டு. இவை மணத்தை அறியவும்,