பக்கம்:குழந்தைகள் கலைக்களஞ்சியம் 9.pdf/38

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

வாழை

33


நீராவியின் அழுத்தம் அதிகமானால், வால்வு இந்த வில்லை அழுத்தி, மிகுதியாக உள்ள நீராவி துளை வழியே வெளியேற வழிசெய்யும்.

வீடுகளில் விரைவில் சமையல் செய்ய உதவும் அழுத்தக் குக்கரில் (Pressure cooker) காப்பு வால்வைக் காணலாம். வேறுபல சாதனங்களிலும் தேவைக்கேற்பப் பலவகைக் காப்பு வால்வுகள் பயன்படுகின்றன.

நம் உடலிலுள்ள இதயத்தில் மேலிரண்டும் கீழிரண்டுமாக நான்கு அறைகள் உள்ளன. மேலறைகளிலிருந்து இரத்தம் கீழறைகளுக்குச் செல்லும்; எதிர்த் திசையில் செல்லாது. அதற்கேற்றவாறு அறைகளுக்கிடையே வால்வுகள் அமைந்துள்ளன. அதை விளக்கும் படத்தை 'இதயம்' என்னும் கட்டுரையில் காணலாம்.

சிரைகள் என்னும் இரத்தக் குழாய்கள் மூலம் உடலின் பல்வேறு பகுதிகளிலிருந்து இரத்தம் இதயத்துக்கு வருகிறது. சிரைகளில் இதயத்தை நோக்கிச் செல்லும் இரத்தம் மீண்டும் பின்னேக்கி பின்னோக்கி வராதவாறு தடுக்கும் வகையில் சிரைகளினுள் வால்வுகள் அமைந்துள்ளன. இரத்தம் ஒரு வழியிலேயே செல்ல இவை உதவுகின்றன. இதை இங்குள்ள படத்தில் காணலாம்.

இரத்தம்

இரத்தம்

வானொலிப் பெட்டி, தொலைகாட்சி பெட்டி முதலியவற்றிலுள்ள சில சாதனங்களுக்கும் 'வால்வு' என்ற பெயருண்டு. இந்த சாதனத்தில் மின்சாரம் ஒரு திசையிலேயே பாய முடியும். ஆகையால் இதற்கு வால்வு என்ற பெயர் ஏற்பட்டது.


வாழை: வாழை மிகவும் பயனுள்ளது என்று அனைவருக்கும் தெரியும். இதன் எல்லாப் பாகங்களும் நமக்குப் பல வழிகளில் பயன்படுகின்றன. வாழைப்பழம் சுவைமிக்கது. எல்லாக் காலங்களிலும் கிடைக்கும். இந்தியாவில் சிறப்பாகக் கருதப்படும் பழங்களுள் இதுவும் ஒன்று. மற்றவை மா, பலா ஆகும். இம் மூன்றையும் 'முக்கனி' என்பர்.

மிகுந்த வெப்பமும் நீரும் உள்ள இடங்களில் வாழை செழித்து வளரும். இந்தியா, மலேசியா, இந்தோ-சீன நாடுகள். ஜப்பான், பசிபிக் சமுத்திரத் தீவுகள், கிழக்கு - தெற்கு ஆப்பிரிக்க நாடுகள், மேற்கிந்தியத் தீவுகள், பிரேசில் ஆகிய இடங்களில் வாழை அதிகமாகப் பயிராகின்றது. வாழையில் பல வகைகள் உண்டு. மொந்தன், பச்சை வாழை, மலைவாழை, நேந்திரம், பேயன், பூவன், ரசவாழை, செவ்வாழை, ரஸ்தாளி முதலியன இந்தியாவில் பயிராகும் வாழைகளில் முக்கியமானவை.

வாழை உண்மையில் மரம் அல்ல. அடி மரம்போலத் தோன்றுவது அதன் இலைப் பட்டைகளாகும். இப்பட்டைகள் ஒன்றின் மேல் ஒன்று அமைந்து மரத்தண்டுபோலத் தோற்றமனிக்கிறது. இத்தகைய தண்டு. போலித்தண்டு எனப்படும். வாழையின் உண்மையான தண்டு தரைக்குக் கீழ் உள்ளது. இது மட்டத்தண்டுக் கிழங்கு (Rhizome) என்னும் தண்டு வகையைச் சேர்ந்தது. இதிலிருந்து இலைப் பட்டைகள் தோன்றி ஒன்றையொன்று தழுவிக் கொண்டு, மரம்போல வளருகின்றன. பூக்கொத்தும் இந்தக் தரைக்கீழ்த் தண்டிலிருந்தே வளர்கிறது. இது போலித்தண்டின் நடுவிலே வளர்ந்து வந்து, தண்டின் உச்சியிலே வெளிவரும்.

பூக்கொத்து கருஞ்சிவப்பு நிறமான பல மடல்களால் மூடப்பட்டிருக்கும். ஒவ்வொரு மடலின் அடிப்புறத்திலும் நீளமான பல பூக்கள் இருக்கும். இப்பூக்கள் ஒன்றின்மேல் ஒன்றாக இரு வரிசைகளிலிருக்கும். இப்பூக்களிலிருந்தே கனி உண்டாகிறது.

வாழையில் விதைகள் உண்டாவதில்லை. மரத்தின் அடியிலுள்ள கிழங்கிலிருந்து சிறு கன்றுகள் வளரும்.

வாழை - பூக்கொத்து

வாழை - பூக்கொத்து