உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:குழந்தை செல்வம்.pdf/15

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது


10. பசு

பச்சைப்புல்லைத் தின்று, வெள்ளைப்
       பால் தர, நீ என்ன
பக்குவஞ் செய்வாய்? அதனைப்
       பகருவையோ? பசுவே!
உச்சியுடல் நக்கி, ஈன்ற
       உடன், உனது கன்றை
உயிரெழுப்பும் மாயம் எதோ?
       உரைத்திடுவாய், பசுவே! 1

வாய்க்கினிய பால் தருவாய்;
       வயற்குரமும் தருவாய்;
வண்டிகட்டக் காளையும் நீ
       வளர்த்தளிப்பாய்,பசுவே!
தாயில்லாப் பிள்ளைகட்குத்
       தாய் ஆவாய்; நோயால்
தளர்பவர்க்கு மருத்துவச்சி
       தானாவாய்,பசுவே! 2

11. பால்

அம்மா பாலைக் கறந்திடுவாள்.
பாலைக் காய்ச்சி ஆறவைப்பாள்;
ஆறின பாலில் உறைவிடுவாள்.
உறைவிட்ட பால் தயிராகும்;
தயிரைக் கடைந்தால் மோராகும்,
மோரில் வெண்ணெய் படர்ந்துவரும்;
வெண்ணெயை உருக்கினால் நெய்யாகும்.
நெய்யில் அப்பம் சுட்டிடலாம்;
நீயும் நானும் தின்றிடலாம்.