உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:குழந்தை செல்வம்.pdf/44

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

38

குழந்தைச் செல்வம்


உள்ளே புகுந்துநெல் தின்று தின்று - வயிறு
      ஊதிப் புடைத்துப் பருத்ததடா!
மெள்ள வெளியில் வருவதற்கும் - ஓட்டை
      மெத்தச் சிறிதாகிப் போச்சுதடா! 2

பானையைக் காலை திறந்தவுடன் - அந்தப்
      பாட்டியின் பக்கமாய் வந்த ஒரு
பூனை எலியினைக் கண்டதடா!-ஓடிப்
     போய் அதைக் கொளவியே சென்றதடா! 3

கள்ள வழியினிற் செல்பவரை - எமன்
     காலடி பற்றித் தொடர்வானடா!
உள்ள படியே நடப்பவர்க்குத் - தெய்வம்
     உற்ற துணையாக நிற்குமடா!

35. அப்பம் திருடின எலி

செட்டியார் வீட்டில் அடுக்களையில் - சென்ற
     தீபா வளியன் றிரவுதனில்
வட்டியில் அப்பம் இருந்ததம்மா! - அதை
     வாசத்தினால் அறிந்தோர் எலிதான்; 1

'நெய்யினில் சுட்ட பணிகாரம் - இது
     நேர்த்தியாய்ச் சுட்ட பணிகாரம்,
பையப் பையக் கடித் துண்பதற்கும் - வெகு
     பக்குவமான பணிகாரம். 2

யார்க்கும் கிடையாப் பெருநிதியாம் - இதை
    யான் இன்று பெற்றதென் பாக்கியமே;
பார்க்கும் பொழுதேநீர் வாயினிலே - ஊறிப்
    பாய்கின்றதே,பசி யாகின்றதே. 3

[அப்போது வேறு சில எலிகள் சத்தமிடக் கேட்டு :]