பக்கம்:கெடிலக் கரை நாகரிகம்.pdf/163

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

162

கெடிலக்கரை நாகரிகம்


பெயர்க் காரணம்

ஏகம்ப வாணனது பெயர்க்காரணம் பற்றி ஒரு கதை வழங்கப்படுகிறது: “வாணன் குழந்தையாயிருந்த போதே பெற்றோர் இறந்து விட்டனர். குழந்தையை ஏகன் என்னும் பண்ணையாள் உடனிருந்து வளர்த்து ஆளாக்கினான். வளர்ந்து பெரியவனான வாணன் கம்பரிடம் கல்வி கற்றான். இவன் தன்னை உருவாக்கிய ஏகனுக்கும் கம்பருக்கும் நன்றி செலுத்து முகத்தான் அவ் விருவர் பெயரையும் இணைத்து இறுதியில் தன் குலப் பெயரையும் சேர்த்து (ஏகன்+கம்பன்+வாணன்- ‘ஏகம்ப வாணன்) எனத் தனக்குப் பெயர் சூட்டிக்கொண்டான்” - இது கதை. இந்தக் கதையில் கம்பரை இழுத்து வம்பு செய்திருப்பது பொருந்தாது. வாணன் காலம் எங்கே - கம்பர் காலம் எங்கே? ஏகம்பவாணனுக்குக் கூறப்படும் பெயர்க்காரணம், கம்பருக்குக் கூறப்படும் பல்வேறு பெயர்க்காரணங்கள் போன்ற கற்பனையே வாணனது ‘ஏகம்பன்’ என்னும் பெயர் காஞ்சி ஏகம்பரது பெயராக இருக்கக் கூடாதோ?

கால ஆராய்ச்சி

தமிழ் நாவலர் சரிதை என்னும் நூலில் ஏகம்ப வாணனைப் பற்றிப் பல பாடல்கள் உள்ளன. அவற்றுள், பாண்டியனது வேப்பமாலையை வாங்கிவருமாறு ஏகம்பவாணனால் அனுப்பப்பட்ட தாதியர் பாண்டியனைப் பார்த்துக் கூறியனவாகச் சில பாடல்கள் உள்ளன. அவற்றுள் (182, 183) இரு பாடல்களில்,


“தென்னவா மீனவா சீவலமாறா மதுரை
மன்னவா பாண்டி வரராமா’’ ....
“சேர்ந்திருக்கு நெல்வேலிச் சீவலமாறா

தமிழை ஆய்ந்துரைக்கும் வீரமாறா"

எனப் பாண்டியன் விளிக்கப்பட்டுள்ளான். இங்கே ‘சீவலன்’ என்று குறிக்கப்பட்டிருக்கும் பாண்டியன், வெற்றி வேற்கை இயற்றிய அதிவீரராம பாண்டியனாவான். இதனை,


“கோ ஜடிலவர்மன் திரிபுவன சக்கர வர்த்தி
கோனேரின்மை கொண்டான் திருநெல்வேலிப்
பெருமாள் குலசேகர தேவர்’ நந்தனாரான அழகம்

பெருமாள் அதிவீரராமரான பூரீவல்லபதேவர்’’