பக்கம்:கெடிலக் கரை நாகரிகம்.pdf/178

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

கெடில நாட்டுப் பெருமக்கள்

177



இந்தப் புகைப்படம் 4-1-1967 ஆம் நாள் எடுக்கப்பட்டது. கட்டடம் இன்னும் முடியவில்லை. வேலை நடந்து கொண்டிருக்கிறது. இயற்கைச் சூழ்நிலையில் அமைக்கப்படும் இந்தக் கட்டடம், சுந்தரர் நினைவை என்றென்றும் உலகிற்கு அறிவுறுத்திக் கொண்டிருக்கும். சுந்தரர்க்குத் திருநாவலூரில் இந்த நினைவு மாளிகை எழுப்பப்படுவதல்லாமல், பெரிய திருக் கோயிலுக்குள் அவருக்கென்று தனியாகச் சிறிய திருக்கோயில் ஒன்றும் எழுப்பப்பட்டுள்ளது. திருக்கோயிலில் உள்ள சுந்தரரின் வார்ப்படச் சிலை, சுந்தரர் என்னும் பெயருக்கு ஏற்ப மிகவும் அழகாகக் கவர்ச்சியாக உள்ளது. கெடிலக் கரையில் பிறந்து வளர்ந்து தேவாரப் பாடல்கள் பல பாடித் தமிழையும் சமயத்தையும் வளப்படுத்திய சுந்தரர் புகழ் நீடு வாழ்க!

‘திருநாவுக்கரசரும் சுந்தரரும் பிறந்ததால் திருமுனைப்பாடி நாடு நாடுகளுக்குள் மிகச் சிறந்ததாகும்; இதற்கு மேல் இந்நாட்டிற்கு இன்னும் என்ன பெருமை வேண்டும்? இஃதொன்றே போதும் எனச் சேக்கிழார் பெரிய புராணத்தில் கூறியுள்ள கருத்து ஈண்டு நினைவு கூரத்தக்கது.


மெய்கண்ட தேவர்

சந்தான குரவர்

சைவ மதத்தில் திருஞான சம்பந்தர், திருநாவுக்கரசர், சுந்தரமூர்த்தி, மாணிக்க வாசகர் ஆகிய நால்வரையும் ‘சமய குரவர் நால்வர்’ அல்லது ‘சமயாசாரியர் நால்வர்’ என அழைப்பது மரபு. அதுபோலவே, மெய்கண்டதேவர், அருணந்தி சிவாசாரியார், மறைஞானசம்பந்தர், உமாபதி சிவாசாரியார் என்னும் நால்வரையும் ‘சந்தான குரவர் நால்வர்’ அல்லது ‘சந்தானாசாரியர் நால்வர்’ எனச் சைவர்கள் அழைப்பர். இந்தச் சந்தான குரவர் நால்வருமே தென்னார்க்காடு மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள். இவர்களுள் பின் இருவரும் சிதம்பரம் வட்டத்தைச் சேர்ந்தவர்கள்; முன் இருவருமோ, முறையே கெடிலம் பாயும் திருக்கோவலூர் வட்டத்தையும் கடலூர் வட்டத்தையும் சேர்ந்தவர்கள். இந் நால்வர்க்குள்ளும் முதல் ஆசான் மெய்கண்ட தேவர். மெய்கண்டார் எனவும் இவர் அழைக்கப்படுவார்.

பிறப்பு

மெய்கண்டார், நடுநாடு எனப்படும் திருமுனைப்பாடி நாட்டிலுள்ள பெண்ணாகடம் என்னும் ஊரில் வேளாளர் மரபில் தோன்றினார். தந்தை பெயர் அச்சுத களப்பாளர். இவரை