பக்கம்:கெடிலக் கரை நாகரிகம்.pdf/378

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

கெடிலக்கரை ஊர்கள்

377


இடம்’ எனக் குறிப்பிடப்பட்டிருப்பது பாடலிபுத்திரமாகும். பாடலிபுத்திரத்திலிருந்து சமணர்க்குத் தெரியாமல் நாவுக்கரசர் ஒரே இரவில் திருவதிகை சென்று விட்டார் என்பது இப் பாடலால் புலனாகிறது. யாருக்கும் தெரியாமல் இரவில் புறப்படுபவர் முன்னிரவில் புறப்பட்டிருக்க முடியாது. எல்லாரும் படுத்த பிறகு இரபு பத்து அல்லது பதினொரு மணிக்கு மேல்தான் புறப்பட்டிருக்க வேண்டும். அவ்வாறு புறப்பட்டவர் விடிவதற்குள் திருவதிகையை அடைந்திருக்க வேண்டும். தெரியாமல் செல்பவர்கள் விரைவாக நடப்பது இயற்கையென்றாலும் சூலைநோய் (வயிற்றுநோய்) கொண்டிருந்ததால் நாவுக்கரசர் ஒரளவு மெதுவாக நடந்து சென்றிருப்பார். எனவே, ஒரு வயிற்று நோய்க்காரன் நள்ளிரவில் புறப்பட்டு விடிவதற்குள் சென்றடையக் கூடிய தொலைவிலேயே திருவதிகை இருந்தது என்பதும் இப் பாட்டிலிருந்து உய்த்துணரப்படலாம். அங்ங்னமெனில், திருவதிகையிலிருந்து ஏறக்குறைய 20 கி.மீ. (12 மைல்) தொலைவில் பாடலிபுத்திரம் இருந்திருக்கலாம் என்று கொள்ளலாம். இந்தக் கருத்தை நினைவில் இருத்தி அடுத்த கருத்துக்குச் செல்வாம். நாவுக்கரசர் சமணத்திலிருந்து சைவத்திற்கு மாறியதையறிந்த சமணர்கள் பொறாது துடிப்பதைச் சேக்கிழார் பின்வரும் பாடலால் தெரிவிக்கிறார்:


[1]“இன்ன தன்மையில் இவர்சிவ நெறியினை எய்தி
மன்னு பேரருள் பெற்றிடர் நீங்கிய வண்ணம்
பன்னு தொன்மையிற் பாடலி புத்திர நகரில்
புன்மை யேபுரி அமணர்தாம் கேட்டது பொறாராய்”

இப்பாடலிலுள்ள “தொன்மையின் பாடலிபுத்திரநகர்” என்னும் பகுதியால், பாடலிபுத்திரம் மிகவும் தொன்மை வாய்ந்தது எனவும், ஒரு நகரம் எனவும் அறியலாம்.

‘நாவுக்கரசருக்குப் பல தொல்லைகள் தந்த சமணர்கள் இறுதியாக அவரைக் கல்லிலே கட்டிக் கடலிலே போட்டனர். அவர் தப்பித்துக் கொண்டு திருப்பாதிரிப் புலியூர்ப் பக்கத்தில் கரையேறினார்; பின்னர்த் திருப்பாதிரிப் புலியூரை அடைந்து சிவபெருமானை வழிபட்டார்’ என்று சேக்கிழார் பாடியுள்ளார்; பாடல்கள்;

[2]“வாய்ந்த சீர் வருணனே வாக்கின் மன்னரைச்
சேர்ந்தடை கருங்கலே சிவிகை ஆயிட


  1. பெரிய புராணம் - திருநாவுக்கரசர் - 79.
  2. பெரிய புராணம் - திருநாவுக்கரசர் - 131, 133.