பக்கம்:கெடிலக் கரை நாகரிகம்.pdf/385

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

384

கெடிலக்கரை நாகரிகம்


குறுந்தொகைப் (75) பாடலில்,

"வெண்கோட் டியானை சோணை படியும்
பொன்மலி பாடலி பெறீஇயல்”

எனவும், மாமூலனார் அகநானூற்றுப் (265) பாடலில்,

"பல்புகழ் நிறைந்த வெல்போர் நந்தர்
சீர்மிகு பாடலிக் குழீஇக் கங்கை
நீர்முதற் கரந்த நிதியங் கொல்லோ"

எனவும், கொங்கவேளிர் பெருங்கதைப் (1-58 - 42) பாடலில்,

'பாடலிப் பிறந்த பசும்பொன் வினைஞர்’

எனவும் பாடலியைப் புகழ்ந்து பாடியுள்ளனர். இப்புலவர்கள் பாடலி என்று வடநாட்டுப் பாடலிபுத்திரத்தையே குறிப்பிட்டுள்ளனர். பாடலி சோணையாற்றங் கரையில் இருப்பதாகப் படுமரத்து மோசி கீரனாரும், கங்கைக் கரையில் இருப்பதாக மாமூலனாரும் கூறியுள்ளனர். இவ்வூருக்கு அருகில் சோணையும் கங்கையும் ஒன்று கூடுகின்றன. ஆதலின் இவ்வாறு இருவேறு விதமாகக் கூறப்பட்டுள்ளது. இது பாடலிபுரம் எனவும் அழைக்கப்படும். பழைய மகத நாட்டின் தலைநகராகப் பாடலிபுத்திரம் விளங்கியது. இப்போதிருக்கும் பாட்னாவுக்கு அருகில் இஃது இருந்திருக்கக் கூடும் என உய்த்துணரப்படுகிறது.

வடக்கே பாட்னா பாடலிபுத்திரம் சிறப்புற்றுத் திகழ்ந்ததைப் போலத் தெற்கே திருப்பாதிரிப் புலியூர் சிறப்புற்றுத் திகழ்ந்ததால், இவ்வூரும் முகமனாகப் பாடலிபுத்திரம் என அழைக்கப்பட்டதாக ஆராய்ச்சியாளர் சிலர் அறிவிக்கின்றனர். வடக்கே வட மதுரை இருப்பதுபோலத் தெற்கேயும் மதுரை இருக்கிறது. வடக்கே காசி இருப்பது போலத் தெற்கேயும் தென்காசி இருக்கிறது. அங்கே வட கைலாசம் போல இங்கே தென் கைலாசம் இருக்கிறது. இவ்வாறே அங்கும் இங்கும் பாடலிபுத்திரங்கள் இருந்தன என்பது அவ்வாராய்ச்சியர்களின் கருத்து. மற்றும், சமண சமயம் வடக்கேயிருந்து தெற்குக்கு வந்தது என்பதும் ஈண்டு நினைவு கூரத்தக்கது. வடக்கேயிருந்து வந்த சமணர்கள் அங்கேயிருந்து பாடலிபுத்திரத்தையும் இங்கே கொண்டுவந்து விட்டார்கள். இந்தப் பெயர் வழக்கு, சப்பான் நாட்டை ‘ஆசியாவின் பிரிட்டன்’ என்றும், பம்பாயைக் ‘கிழக்கத்திய இலண்டன்’ என்றும், கோயமுத்துரைத் ‘தென்னகத்தின் மான்செஸ்டர்’ என்றும் இந்தக் காலத்தில் அழைப்பது போன்றதாகும் இது.