பக்கம்:கெடிலக் கரை நாகரிகம்.pdf/419

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

418

கெடிலக்கரை நாகரிகம்



சக்கிலியர், குறவர் முதலிய பல்வேறு இனத்தவர்களும் இங்கே வாழ்கின்றனர்.

பெயருக்குப் பின்னால் முதலியார், பிள்ளை, செட்டியார், ஐயர் போன்ற பட்டங்கள் போட்டுக் கொள்பவர்கட்கு இடையே பல்வேறு பிரிவினர் உளர். வேளாளர்களும் அகம்படியர்களும் முதலியார், பிள்ளை என்றும், செங்குந்தர் முதலியார் என்றும், பிரமாணர் ஐயர், சாஸ்திரி, சர்மா, ராவ், ஐயங்கார், ஆச்சாரி என்றும், இலிங்கதாரிகள் ஐயர், பத்தர், என்றும், ஆயிரவர் பேரி வடக்கத்தியார் - அச்சிறு பாக்கத்தார் - சோழியர் முதலியோரும் வாணியர், கோமுட்டியர், சேடர், சேணியர், தேவாங்கர், சாலியர் முதலியோரும் செட்டியர் எனவும், கம்மாளர்கள் ஆசாரி, பத்தர் எனவும், இடையர்கள் கோனார், பிள்ளை, யாதவர் என்றும், கம்மவார்கள் நாயடு, நாய்க்கர் என்றும், சாணார் எனப்படுபவர் கிராமணி, நாடார், பிள்ளை என்றும், குயவர்கள் உடையார், பிள்ளை, பத்தர் என்றும், செம்படவர் செட்டியார், கரையாளர் என்றும் பட்டங்கள் போட்டுக் கொள்கின்றனர். கம்மாளர்களும் செட்டியார் என்னும் பட்டம் உடையவர்களும் பூணுால் அணிந்து கொள்கின்றனர். ‘க்ஷத்திரியர்’ என்ற முறையில் வன்னியருள்ளும் ஒரு சிலர் பூணூல் போட்டுக் கொள்கின்றனர். கள்ளக் குறிச்சி வட்டத்தில் கல்வராயன் மலைப் பகுதியில் மலையாளிகள் என்பவர்கள் வாழ்கின்றனர். இவர்கள் கேரள மலையாளிகள் அல்லர், தமிழக மலையாளிகள். கவுண்டர் எனவும் இவர்கள் தங்களைக் குறிப்பிட்டுக் கொள்கின்றனர். மேற்சொன்னவர்களேயன்றி, இன்னும் தமிழகத்தின் வேறு மாவட்டங்களில் உள்ள தமிழ் இனத்தவரும் தமிழக மல்லாத வேறு மாநில மக்களும் ஓரளவு வாழ்கின்றனர்.

வன்னியர் உழவும் சிறு தொளழில்களும், அரிசனர் உழவும் கூலி வேலைகளும், செங்குந்தர், சேடர், சேணியர், தேவாங்கர் நெசவும், வேளாளர், அகம்படியர், உடையார், ரெட்டியார் போன்றவர்கள் உழவும் உழுவித்தலும், பல்வேறு தமிழ்ச் செட்டிமார்கள் வாணிகமும், வாணியர் எண்ணெய் ஆடுதலும், கம்மாளர்கள் தச்சு வேலையும், நகை வேலையும் உலோகப் பொருள் வேலையும் சிறப்பாகச் செய்கின்றனர். மற்ற இனத்தவர்கள் செய்யும் தொழில்கள் அவர்களுடைய பெயர்களிலிருந்தே தெரிகின்றன; அவர்கள் மற்ற இடங்களில் போலவே இங்கேயும் அத்தொழில்களைச் செய்து வாழ்கின்றனர். பொதுவாக இந்தக் காலத்தில் எல்லாருமே எல்லாத் தொழில்களும் கலந்து செய்து வருகின்றனர் எனலாம். முற்றிலும் இனவேற்றுமையும் தொழில் வேற்றுமையும் ஒழிவது எந்நாளோ?