பக்கம்:கெடிலக் கரை நாகரிகம்.pdf/448

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

மக்களும் வாழ்க்கை முறையும்

447



ஆடித் திங்களில் மாரியம்மன் கோயில்களில் விழா - தீமிதி விழா செடல் திருவிழா. ஆடிப் பூரத்தில் சிவன் கோயில்களில் வளையல் திருவிழா - பதினெட்டாம் பெருக்கு.

ஆவணி மூலத்தில் சிவன் பிட்டுக்கு மண் சுமந்த விழா.

புரட்டாசியில் - நவராத்திரி - கலைமகள் விழா அம்மன் கோயில்களில் அம்புத் திருவிழா.

ஐப்பசியில் - கந்தர் சஷ்டி - சூரசம்மார விழா. கார்த்திகையில் - சோமவார விழா, தீபதரிசன விழா

மார்கழியில் - வைகுண்ட ஏகாதசி விழா - பாவை விழா - திருப்பள்ளியெழுச்சி விழா - நடராசர் ஆருத்ரா தரிசனம்.

தைத் திங்களில் பொங்கல் விழா - கரிநாள் விழா - ஆற்றுத் திருவிழா - கடல் முழுக்கு - தைப் பூச விழா.

மாசியில் - மாசிமக விழா - மகா சிவராத்திரி விழா. பங்குனியில் - பங்குனி உத்திர விழா - பத்து நாள் பெருவிழா உத்தரத்தில் தேர் ஓடுதல்.

இன்ன பிற பல்வேறு வகை விழாக்கள் திருமுனைப்பாடி நாட்டில் நடைபெற்று வருகின்றன.

நிமித்தங்கள்

இலக்கியங்களில் நிமித்தம் என்று சொல்லப்படுவது பேச்சு வழக்கில் ‘சகுனம்’ எனப்படுகிறது. திருமுனைப்பாடி நாட்டிலும் பல்வேறு நிமித்தங்கள் பார்க்கப்படுகின்றன: அவற்றுள் சில வருமாறு:

நன்னிமித்தங்கள்

மணி அடித்தல், சங்கு ஊதுதல், வேட்டு போடுதல், பீரங்கி வெடித்தல், கருடன் கூவுதல், கழுதை கத்துதல், நரி முகத்தில் விழித்தல், இரட்டைக் காகங்களைப் பார்த்தல், சவ ஊர்வலம், நாய் உடம்பை உதறல், திருமங்கலி (சுமங்கலி) எதிரே வருதல், பூக்கூடை - தண்ணிர்க் குடம் - தானிய மூட்டை - அழுக்குத் துணி மூட்டை முதலியன எதிரே வருதல், நடக்கும் கைகூடும் போய் வரலாம் - நல்லது முதலிய நற்சொற்கள் தற்செயலாய்க் காதில் விழுதல், பொருள் தவறிக் கீழே விழுதல் முதலியன நல்ல நிமித்தங்களாகக் (சகுனங்களாகக்) கருதப்படுகின்றன. வீட்டை விட்டுப் புறப்படும்போது, வீட்டிலுள்ள திருமங்கலி ஒருத்தியை வாயிற்படியில் நிற்கச் செய்து செயற்கை முறையில் நல்ல நிமித்தம் உண்டாக்கிக் கொண்டு போவதும் உண்டு.