பக்கம்:கெடிலக் கரை நாகரிகம்.pdf/449

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

448

கெடிலக்கரை நாகரிகம்



தீ நிமித்தங்கள்

ஆந்தை அலறல், கோட்டான் கூவுதல், காகம் கரைதல், நாய் அழுதல், பூனை குறுக்கே போதல், மழை பெய்தல், கைம்பெண் (விதவை) ஒற்றைப் பார்ப்பார் ஒற்றைப் பூணூல்காரர் ஆகியோர் எதிரே வருதல், எண்ணெய்க் குடம் விறகுக்கட்டு, வைக்கோல் கட்டு கோடரி - மண்வெட்டி முதலியன எதிரே வருதல், நடக்காது போகாதே - அழிந்துபோகும் முதலிய தீச்சொற்கள் தற்செயலாய்க் காதில் விழுதல், கால் தடங்கல், எதிரே ஏதேனும் தடை ஏற்படுதல், தும் முதல், புறப்பட்டுப் போகும்போதும் ‘எங்கே போகிறாய்’ என்று யாரேனும் கேட்டல், புறப்பட்டுப் போகும்போது பெயர் சொல்லியோ கை தட்டியோ யாரேனும் அழைத்தல் முதலியன தீய நிமித்தங்களாகக் (சகுனங்களாகக்) கருதப்படுகின்றன.

புறப்படும்போது தீய நிமித்தம் ஏற்படின் புறப்பாட்டைச் சிறிது நேரம் ஒத்திப் போடுவர்; புறப்பட்டுப் போகுங்கால் சிறிது தொலைவில் தீய நிமித்தம் ஏற்படின் திரும்பி வந்து விடுவர். தீய நிமித்தத்தை வெல்வதற்காக வீட்டில் சிறிது நேரம் அமர்ந்தோ அல்லது ஒரு விழுங்காவது தண்ணீர் அருந்தியோ பிறகு மறுபடியும் புறப்படுவர். சிலர் பயணத்தை நிறுத்தி விடுவதும் உண்டு.

நம்பிக்கைகள்

இந்தப் பகுதியில் பின்வரும் நம்பிக்கைகள் உள்ளன. நம்பிக்கைக்கு ஏற்றபடி மக்களின் செயல் முறைகள் உள்ளன.

நாள் காலையில் நல்ல கையால் ‘போனி’ ஆனால் அன்று முழுதும் வாணிகம் நன்கு நடக்கும். நரி முகத்தில் விழித்து விட்டுச் சென்றால் வாணிகம் நன்கு ஊதியம் அளிக்குமாம். அங்காடிக் கூடையைத் தூக்கிவிட்டுக் கைதட்டினால் நன்கு விற்பனையாகுமாம். வாணிகம் செய்யுமிடத்திலும் தொழில் செய்யுமிடத்திலும் படுத்தால் வாணிகமும் தொழிலும் படுத்துவிடுமாம்.

கோடைக் காலத்தில் ‘கொடும் பாவி’ கட்டி இழுத்து மாரடித்து அழுது பின்னர் அதைக் கொளுத்திவிட்டால் மழை பெய்யும். இந்த நம்பிக்கையின் அடிப்படையில் ஊர் எல்லைகளின் மணலில் கொடும்பாவி உருவங்கள் செய்து வைப்பதும் உண்டு.

ஊர் எல்லையில் எல்லைக் கல் நட்டு வழிபடின், ஊரைக் பிடிக்கவரும் துன்பங்களை எல்லைக் கல் தடுத்து நிறுத்திவிடும்.