பக்கம்:கெடிலக் கரை நாகரிகம்.pdf/74

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
6. கெடிலத்தின் முடிவு

திரிசூலம்

திருவயிந்திரபுரத்துக்கும் கடலூர்ப் புதுப்பாளையத்திற்கும் நடுவே நான்கு திசைமாற்றத் திருப்பங்களைப் பெற்றுள்ள கெடிலம், புதுப்பாளையத்திலிருந்து கிழக்குநோக்கி 3 கி.மீ. தொலைவு ஒடிக் கடலில் கலக்கிறது. கடலில் கலப்பதற்கு முன்னால், கெடிலத்திலிருந்து வடக்குநோக்கி ஒரு கிளையும் தெற்குநோக்கி ஒரு கிளையுமாக இரண்டு கிளைகள் பிரிகின்றன. இந்த வகையில் கெடிலத்தின் தோற்றத்திற்குத் திரிகுலத்தை ஒருவாறு ஒப்பிட்டுக் கூறலாம். இதனால் கெடிலம் மூன்று இடங்களில் கடலோடு கலப்பதைக் காணலாம்.

வடகிளை

கெடிலத்தின் வடகிளை அவ்வளவு சிறப்பானதன்று; அது தேவனாம்பட்டினத்தைச் சுற்றி வளைத்துக்கொண்டு கடலில் கலக்கிறது. கெடிலத்தின் முக்கிய நடுப் பகுதிக்கும் அதன் வடகிளைக்கும் நடுவே தீவு போன்ற தரைப் பகுதி அமைந்துள்ளது. அதிலேதான் தேவனாம்பட்டினம் என்னும் சிற்றுார் உள்ளது. இவ்வூரின் கிழக்கே கடலும், தெற்கே கெடிலமும், மேற்கிலும் வடக்கிலும் கெடிலத்தின் வடகிளையும் இருக்கக் காணலாம் (கெடிலக்கரை - படம் பார்க்கவும்). இந்தத் தேவனாம்பட்டினத் தீவில் கடற்கரையை யொட்டிக் கெடிலத்தின் வடகரையில் வரல்ாற்றுச் சிறப்பு மிக்க செயின்ட் டேவிட் கோட்டை பாழடைந்த நிலையில் காணப்படுகிறது. இது பற்றி வேறோரிடத்தில் விளக்கம் காணலாம்.

முக்கிய நடுப் பகுதி

செயின்ட் டேவிட் கோட்டைக்கு வெகு அண்மையில்தான் கெடிலத்தின் முக்கிய நடுப்பகுதி கடலோடு கலக்கிறது. ஆறு கடலோடு கலக்கும் அந்தக் கண்கொள்ளாக் காட்சியைக் கீழுள்ள படத்தில் கண்டு களிக்கலாம்:

படத்தில் தொலைவில் வெண்மையாய்த் தெரிவது கடல் அலை. அதற்கு முன்னால் இருப்பது கெடிலம் ஆறு. ஆறும் கடலும் கலக்கும் இடத்தில் அலை மோதுவதைக் காணலாம்.