பக்கம்:கேரக்டர்.pdf/83

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

83

ஒரு சமயம் அவர் தேர்தலுக்கு நின்றார். பதினாயிரக் கணக்கில் பணத்தை அள்ளி வீசினார். தம் பெயரையும் போட்டோவையும் பிரசுரித்துப் பிரபலப்படுத்தினார். தேர்தலில் தோல்வி அடைந்தபோது அவர் சிறிதும் வருத்தப்படவில்லை. தம்முடைய போட்டோவும், பெயரும் பத்திரிகைகளில் வெளியிடுவதற்குச் சந்தர்ப்பம் கிடைத்ததே, அது போதாதா?

ஒரு சமயம், ரயிலில் முதல் வகுப்பு வண்டியில் அவருக்கு ஒரு சீட் ரிசர்வ் செய்யப்பட்டது. கம்பார்ட்மெண்டுக்கு வெளியில் ஒட்டப்பட்டிருந்த பெயர் ஜாபிதாவில் இவருடைய பெயரும் டைப் செய்யப்பட்டிருந்தது. பங்காருசாமி ரயில் ஏறும்போது ஞாபகமாகத் தம்முடைய பெயர் ஜாபிதாவில் இருக்கிறதா என்று பார்த்துக்கொண்டார். பெயர் இருந்தது; ஆனால் பங்காருசாமி என்பதற்குப் பதிலாகக் கங்காருசாமி என்று தப்பாக டைப் அடிக்கப்பட்டிருந்தது. உடனே தம்முடைய பெயர் தப்பாக இருப்பதை ரயில்வே அதிகாரிக்குச் சுட்டிக் காட்டி அதைத் திருத்தி எழுதிய பிறகுதான் அவர் ரயிலுக்குள் ஏறிச் சென்றார்.

போட்டி அபேட்சகர் பஞ்சாட்சரம் ஒரு சமயம் தம்முடைய பேரக் குழந்தையை முதல் முதலாகப் பள்ளிக்கு அனுப்பியபோது, குழந்தையைக் குதிரை மீது வைத்து, பாண்டு வாத்தியம், நாதஸ்வரம் முழங்க ஊர்வலமாக அழைத்துச் சென்றார். அந்த ஊர்வலம் பங்காருசாமியின் வீதி வழியாகப் போயிற்று. அவ்வளவுதான்; அந்தக் காட்சியைக் கண்டதும் பங்காருசாமிக்கு எங்கிருந்தோ ஒரு வேகம் பிறந்தது.

தமக்கு ஒரு பிள்ளைகூட இல்லையே என்றெல்லாம் அவர் கவலைப்படவில்லை. தூரத்து உறவினர் ஒருவருடைய குழந்தையை அழைத்துவந்து காது குத்து விழா நடத்தினார். அவர் வீட்டில் ஒரு விசேஷம் என்றால் சொல்லவேண்டுமா, தடபுடலுக்கு? வாணவேடிக்கை, பாண்டு வாத்தியம், நாதஸ்வர இசை எல்லாம் சக்கைப்போடு போட்டன. குதிரைக்குப் பதிலாக யானையையே ஊர்வலமாக விட்டார்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கேரக்டர்.pdf/83&oldid=1479754" இலிருந்து மீள்விக்கப்பட்டது