84
யானை ஊர்வலம் என்றால் கூட்டத்துக்குக் கேட்க வேண்டுமா? அக்கம்பக்கத்துக் குடிசையில் வாழ்ந்த குழந்தைகளெல்லாம் யானையைச் சுற்றி வட்டமிட்டன. பங்காருசாமி மிக்க பெருமையோடு யானையின் முன்னால் நடந்து செல்ல ஊர்வலம் நகர்ந்துகொண்டிருந்தது.
திடீரென்று யானை மீதிருந்த குழந்தை பயந்துபோய்க் கீழே இறங்கவேண்டுமென்று அழுது பிடிவாதம் பிடித்தது. பங்காருசாமி கவலைப்படவில்லை. போட்டிக்கு ஊர்வலம் விட்டாகவேண்டும். அவ்வளவுதானே அவருடைய நோக்கம்? குழந்தை யாருடையதாயிருந்தால் என்ன? சுற்றி நின்ற குடிசை வாழ் குழந்தைகளில் ஒன்றைப் பிடித்து யானைமீது ஏற்றிவிட்டார். அந்தக் குழத்தை ரொம்பக் குஷியாக 'ஜம்' மென்று யானைமீது ஏறி உட்கார்ந்து சவாரி செய்தது.
யாரோ ஒரு சினிமா நட்சத்திரம் வீடு கட்டிப் புது மனை புகுவிழா நடத்தியதாகப் பத்திரிகையில் வெளியாகியிருந்த செய்தி பங்காருசாமியின் கண்ணில் பட்டுவிட்டது.
புதிதாக வீடு கட்டுவதென்றால் நாட்கள் ஆகுமே. எனவே, உடனே தாமும் ஒரு பழைய வீட்டை விலைக்கு வாங்கி விழா நடத்தினார். விழா முடிந்தவுடன் வீட்டை விற்று விட்டார். வீடு வாங்கியது விழா நடத்துவதற்குத்தானே? தங்கப் பற்கள் கட்டிக்கொள்வதற்காகத் தம்முடைய அசல் பற்களையே எடுத்தவருக்கு இது ஒரு பிரமாதமா என்ன?