'சிக்கனம்' சின்னசாமி
சைக்கிள் என்ற நாமதேயத்தில் உயிர் வைத்துக் கொண்டிருக்கும் அந்த ஜங்கமப் பொருளுக்குப் பச்சை வர்ணம் ஒரு கேடு!
பெடலின் வலது பாதம் தேய்ந்து மாய்ந்து கழன்று விட்டதால், அந்த நஷ்டம் மரக்கட்டையால் ஈடு செய்யப்பட்டிருந்தது. 'லொடக் லொடக்' என்று சத்தம் போடும் பல், ஆடிப் போன பெல். காயலான் கடை 'வா வா' என்று அழைக்கும் கிழடு தட்டிப்போன தோற்றம்.
'கர்க்க்... சர்க்க்... கிறீங்...சர்ர்ர்...!'-அந்தச் சைக்கிள் ஒரு தபாலாபீஸ் முன்னால் போய் நிற்கிறது.
அதோ, அந்த அபூர்வ வாகனத்திலிருந்து கீழே இறங்கிச் செல்கிறானே அவன் வேறு யாருமில்லை, 'சிக்கனம்' சின்னசாமி தான்! வெளியே போகும்போது வரும்போதெல்லாம் போஸ்டாபீசுக்குள் நுழைந்து அங்கே சும்மா கொடுக்கப்படும் மணியார்டர் பாரத்தை வாங்கி வருவது அவன் வழக்கம்.
மணியார்டர் பாரத்துக்கு விலை கிடையாதல்லவா? இனாமாக எது கிடைத்தபோதிலும் சின்னசாமி அதை விட மாட்டான். அது மட்டுமல்ல; மலிவாக எந்தப் பொருள் எங்கே கிடைத்தாலும் வாங்கத் தவற மாட்டான். அந்தப் பொருள் தேவைதானா அவசியந்தானா என்பதைப்பற்றியெல்லாம் அவனுக்கு அக்கறை கிடையாது. எப்போதாவது